14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

நடந்த சம்பவம் குறித்து சிறுமி, தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார்.
புனே,
மராட்டிய மாநிலம் புனே நகரில் வசித்து வரும் 14 வயது சிறுமிக்கு அதேபகுதியை சேர்ந்த 18 வயது வாலிபருடன் 2 மாதங்களுக்கு முன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். சிறுமி அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி காலை சிறுமி பள்ளிக்கு நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், பள்ளியில் கொண்டு விடுவதாக கூறி சிறுமியை அழைத்துச்சென்றார். ஆனால் வாலிபர் சிறுமியை பள்ளிக்கு கொண்டு விடுவதற்கு பதிலாக, விஷ்ராந்த்வாடி பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச்சென்றார். பின்னர் அங்கு வைத்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த சிறுமி கடந்த 7-ந்தேதி நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விஷ்ராந்த்வாடி போலீஸ் நிலையத்தில் வாலிபருக்கு எதிராக புகார் கொடுத்தனர். இந்தப்புகாரின் பேரில் போலீசார் கற்பழிப்பு மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர்.






