தர்மபுரி: நத்தஅள்ளி அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் நத்தஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் நத்தஅள்ளி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ அங்காளம்மன் கோவில். இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 17-ஆம் தேதி மங்கள இசை முழங்க கொடி ஏற்றத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
தொடர்ந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உட்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னர் மூலவர் தெய்வங்களுக்கான பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் காலை 9.15 மணிக்குமேல் 10.15 மணிக்குள் ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் விநாயகர் விமான கோபுரம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் நத்தஅள்ளி, இண்டூர், பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






