திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றதில் மகிழ்ச்சி - நயினார் நாகேந்திரன்

கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கும் நயினார் நாகேந்திரன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கேரள உள்ளாட்சித் தேர்தலில் நமது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும், இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் கோட்டையாகக் கருதப்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் முதன்முறையாக பாஜக மேயர் பதவியில் அமரவிருப்பது, வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்கான அறிகுறி என்பதில் சந்தேகமில்லை. இந்த வெற்றியின் மூலம், நமது பாரதப் பிரதமர் மோடியின் தலைமையில் கேரளா வளர்ச்சிப் பாதையில் வீறுநடையிடப் போவதை யாராலும் தடுக்க இயலாது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
வெற்றி பெற்றுள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிச் சொந்தங்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






