ஏவிஎம் சரவணன் மறைவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஏவிஎம் சரவணன் மறைவு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
இந்திய திரையுலகில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். இதனை தொடங்கிய ஏ.வி. மெய்யப்பன் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். இவரது மகனான ஏவிஎம் சரவணன் தந்தைபோலவே முக்கிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். 1958ஆம் ஆண்டு முதல் ஏவிஎம்மிற்கு தலைமையேற்று திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஏவிஎம் சரவணன், ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், சமீப காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஏவிஎம் சரவணன் மறைவு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"இந்தியத் திரையுலகின் நிறுவனங்களில் மிகச்சிறந்த தயாரிப்பு ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் எம்.சரவணன் (எ) ஏவிஎம். சரவணன் அவர்கள் இன்று (04.12.2025) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
திரையுலகச் சக்கரவர்த்தி மெய்யப்ப செட்டியார் அவர்களின் புதல்வரான தஎம்.சரவணன் அவர்கள், தந்தை வழி நின்று ஏவிஎம் நிறுவனத்தை மிகச்சிறப்பாக நிர்வகித்து, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையுலமே வியக்கும் வண்ணம் காலத்தால் அழியாத பல பிரம்மாண்டமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்து அளித்தவர்.
திரைத்துறையில் ஒழுக்கம், நேர்மை மற்றும் தொழில் பக்திக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






