தூத்துக்குடியில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடியில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற ஆகஸ்ட் 11ம்தேதி, திங்கட்கிழமை காலை 9 மணி முதல் தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
இந்த சேர்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஐடிஐ-யில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து பயிற்சியாளர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) மற்றும் பட்டயம் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் என அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் தக்க ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7,700 முதல் ரூ.10,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழில் பழகுநர் சட்டம் 1961-ன்படி, இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






