ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆவடி,
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் 4-வது போலீஸ் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் பவானீஸ்வரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
2001-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான பிரேம் ஆனந்த் சின்ஹா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உதவி எஸ்.பி.யாகவும், பெரம்பலூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி.யாகவும் பணிபுரிந்தார்.
பின்னர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரகத்தில் அண்ணா நகர் துணை கமிஷனராகவும், 4 ஆண்டுகள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார். அதன் பின்னர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராகவும், தென் சென்னை போக்குவரத்து பிரிவு இணை கமிஷனராகவும் பணியாற்றினார். 2020-ல் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். பின்னர் தென்மண்டல ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டார். 2022-ம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த காவல் பணிக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.






