இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 May 2025 10:18 AM IST
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக்கொண்டார். தலைமை நீதிபதியாக கவாய்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் கவாய் பதவியேற்றுள்ளார். நவம்பர் 23-ம் தேதி ஓய்வுபெறும் வரை 6 மாதங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகிக்க உள்ளார் கவாய்.
- 14 May 2025 9:53 AM IST
இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்தியதே தான்தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். வர்த்தகத்தை முன்னிறுத்தி, இந்த உடன்பாட்டை எட்ட வைத்ததாக சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
- 14 May 2025 9:49 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே உலகப் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
- 14 May 2025 9:18 AM IST
திருச்சியில் இரு மகள்களை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை
திருச்சி மேல கண்டார்கோட்டை பகுதியில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உடல்களை கைப்பற்றி பொன்மலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக விபரீத முடிவு என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- 14 May 2025 9:15 AM IST
கோடநாடு வழக்கிலும் தண்டனை நிச்சயம் - மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கின் தீர்ப்பு குறித்து உதகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. பொள்ளாச்சி வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என வாக்குறுதி அளித்தோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றார்.
- 14 May 2025 9:10 AM IST
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்விற்கு தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனி தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும் இன்று முதல் மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- 14 May 2025 9:10 AM IST
ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய மத்திய பிரதேச மந்திரி விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார். நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக மந்திரி விஜய் ஷா கூறியிருந்தார். கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் மந்திரி பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
- 14 May 2025 9:10 AM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது. இனி வருங்காலங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களில் எவரும் ஈடுபடாத வகையிலான ஓர் அச்சத்தை இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏற்படுத்தும். அண்ணா பல்கலை. மாணவி மீதான பாலியல் வழக்கிலும் உரிய நியாயம் விரைந்து கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.










