இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 April 2025 10:46 AM IST
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கத்தியால் குத்திய மோகன பிரியன் என்பவர் தனது கையை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். படுகாயமடைந்த கல்லூரி மாணவிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம், விபரீதத்தில் முடிந்துள்ளது.
- 16 April 2025 10:40 AM IST
நெல்லை: பள்ளியில் சக மாணவனை அரிவாளால் தாக்கிய மாணவன், விசாரணைக்குப் பிறகு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். உரிய கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 16 April 2025 9:45 AM IST
முன்னதாக தமிழக சட்டசபை கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தீர்மானத்திற்கான நோட்டீஸை சபாநாயகர் நிராகரித்ததை கண்டித்து பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
- 16 April 2025 9:20 AM IST
தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
- 16 April 2025 9:17 AM IST
தமிழக விவசாயிகள், விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
- 16 April 2025 9:07 AM IST
சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழந்துள்ளார். பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ள மாணவன் அஜய் பால் (17), நள்ளிரவில் கழிவறைக்குச் செல்ல ஸ்விட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். மூச்சு பேச்சு இன்றி கிடந்த அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்த நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெரவள்ளூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 16 April 2025 9:07 AM IST
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 70.32% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், இன்றைய நிலவரப்படி 8.268 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
- 16 April 2025 9:06 AM IST
அமெரிக்காவிடம் இருந்து போயிங் ரக விமானங்களை வாங்க தடை விதித்தது சீனா. மேலும் விமான சாதனங்கள், இயந்திரங்களை வாங்க வேண்டாம் எனவும் தடாலடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 16 April 2025 9:06 AM IST
நெல்லை மற்றும் தென்காசி இடையே பயணிக்கும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. இனி அவர்கள் தங்கள் பேருந்து டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில், அதாவது கூகிள் பே (GPay) மற்றும் போன் பே (PhonePe) போன்ற செயலிகள் மூலமாகவோ அல்லது டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்தோ அல்லது கியூ.ஆர். கோடுகளை ஸ்கேன் செய்தோ பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய வசதி பயணிகளுக்கு பணமில்லா பரிவர்த்தனையை எளிதாக்குகிறது.







