இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Jun 2025 10:54 AM IST
குடிநீர் ஏடிஎம் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- 18 Jun 2025 10:51 AM IST
ஐடி ரெய்டு - நடிகர் ஆர்யா மறுப்பு
சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ரெய்டு நடக்கும் ஹோட்டல் வேறு ஒருவருடையது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
- 18 Jun 2025 10:50 AM IST
குழந்தை சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாய்
கடலூரில் அடித்து கொல்லப்பட்ட 4 வயது குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சுற்றிய தாயால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை இறந்த தகவலை அறிந்து தாயை உறவினர்கள் விடிய விடிய தேடி உள்ளனர். குழந்தை மரணம் குறித்து தாய் பச்சையம்மாளிடம் கடலூர் போலீசார் நடத்திய விசாரணையில் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தை அடித்து கொல்லப்பட்டதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- 18 Jun 2025 9:44 AM IST
ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
ஜூன் 22-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் செல்ல இருந்த ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- 18 Jun 2025 9:37 AM IST
காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு ஏன்? - சீமான்
சிறப்பு எஸ்.ஐ-ஆக பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணியாற்ற வேண்டுமென்பது 23 ஆண்டாகக் குறைக்கப்பட்ட போதும், இந்த புதிய உத்தரவு 2011க்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் பதவி உயர்வில் பாகுபாடு காட்டுவது ஏன்? 2002-2010 வரை பணியாற்றியோருக்கு ஆணை பொருந்தாது என்பது காவலர்களுக்கு செய்யும் துரோகம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
- 18 Jun 2025 9:34 AM IST
தண்டவாளத்தில் இரும்பு கம்பி - ரெயிலை கவிழ்க்க சதி?
சேலம், சங்ககிரி அடுத்த தாழையூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பியால்,ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் எஞ்சின் சேதம் அடைந்தது. ரெயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்தது யார்? என ரெயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
- 18 Jun 2025 9:33 AM IST
டிரோன் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டிய வனத்துறை
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குனில் வயல், எச்சம் வயல் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் காட்டுயானைகள். யானைகளுக்கு பிடிக்காத ஒலியெழுப்பி விரட்டும் அதிநவீன தெர்மல் டிரோன்களை பயன்படுத்தி விரட்டியது வனத்துறை.
- 18 Jun 2025 9:32 AM IST
பேருந்தில் 14 சவரன் நகை திருட்டு
சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மூதாட்டி நிரஞ்சனா தேவியின் கைப்பையில் இருந்த 14 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் இருந்து அஸ்தினாபுரத்துக்குச் சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 18 Jun 2025 9:31 AM IST
சென்னையில் உணவகங்களில் ஐடி ரெய்டு
சென்னை அண்ணா நகர், வேளச்சேரி, ஆயிரம் விளக்கில் உள்ள (SEA SHELL) ஷி செல் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தரமணியில் உள்ள (SEA SHELL) ஷி செல் ஹோட்டலின் உரிமையாளர் குன்ஹி மூசா வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.















