இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Sept 2025 3:27 PM IST
உதவி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
திரவுபதி முர்மு வருகையின் போது இணை ஆணையர் திஷா மிட்டலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 2 Sept 2025 2:37 PM IST
பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா சஸ்பெண்ட்
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிஆர்எஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சேர்ந்த சோம பரத்குமார், ரவீந்தர் ராவ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
- 2 Sept 2025 2:00 PM IST
முறைகேடு வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
சென்னை, கோவை, மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை, கோவை, மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.
- 2 Sept 2025 1:48 PM IST
எனது தாயை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டனர் - பிரதமர் மோடி வருத்தம்
எனது தாயை ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து விட்டனர். என் தாயை மட்டும் அவமதிக்கவில்லை, இந்த நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர் என்று பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி வேதனையுடன் தெரிவித்தார்.
- 2 Sept 2025 1:45 PM IST
ஸ்ரீரங்கம் கோவிலில் யாசகர்கள், முதியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே இருக்கும் வயதானவர்கள், யாசகர்கள், ஆதரவற்றோரை காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ள நிலையில் வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்த முதியவரை காவலர்கள் காலால் உதைத்து, அடித்து இழுத்து சென்றதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- 2 Sept 2025 1:37 PM IST
காதலன் கைவிட்டதால் நண்பரை திருமணம் செய்த பெண்
மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய ஷ்ரதா (வயது 24) என்ற பெண், இறுதியில் திருமணத்தில் விருப்பமில்லை என காதலன் கைவிட்டதால், ரெயிலில் சந்தித்த பள்ளிக்கால நண்பரை திருமணம் செய்துள்ளார். எனினும் 10 நாட்கள் இருவரையும் பிரித்து வைத்து, அதற்கு பின்னும் நண்பர் மீது காதல் இருந்தால் இந்த திருமணத்தை ஒப்புக் கொள்கிறோம் என ஷ்ரதாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.
- 2 Sept 2025 1:33 PM IST
கவனக்குறைவால் நடந்த விபத்து - ரூ.14,39,000 அபராதம்
துபாய்: ப்ரேக் என நினைத்து ஆக்ஸிலரேட்டரை அழுத்தி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவனக்குறைவாக செயல்பட்டதற்கு ரூ.2,40,000, தார்மீக சேதாரங்களுக்கு ரூ.11,99,000 அபராதம் விதித்து ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது துபாய் நீதிமன்றம்.
- 2 Sept 2025 1:09 PM IST
பாலியல் வழக்கில் கைதான எம்.எல்.ஏ. துப்பாக்கி சூடு நடத்தி தப்பி ஓட்டம்
பஞ்சாப்பில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஹர்மீத் பதன்மஜ்ரா காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினார். கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஹர்மீத் பதன்மஜ்ராவும், அவரது உதவியாளர்களும் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு இரு கார்களில் தப்பிச் சென்றனர்.
- 2 Sept 2025 12:59 PM IST
சிட்டி யூனியன் வங்கி ஆண்டு விழாவில் திரவுபதி முர்மு பங்கேற்பு
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் திரவுபதி முர்மு. சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி முர்முவை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதல்-அமைச்சர் உயதநிதி ஸ்டாலின் வரவேற்றனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். பாஜக நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, தமிழிசை ஆகியோரும் ஜனாதிபதி நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.















