இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Sept 2025 11:55 AM IST
தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது - அமைச்சர் அன்பில் மகேஸ்
எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது; யாரும் கவலைப்பட வேண்டாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
- 2 Sept 2025 11:47 AM IST
ரூ.10.28 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் மற்றும் கோவி. செழியன் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு முறையாக இல்லாத நிலையில் கூட தமிழ்நாடு அரசு சிறப்பாக அதனை எதிர்கொண்டுள்ளது. நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரட்டை இலக்க அளவில் வளர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தேர்வாணயங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 52.07 மில்லியன் டாலர் அளவுக்கு நம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
- 2 Sept 2025 11:44 AM IST
பள்ளத்தில் விழுந்து பெண் பலி - சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னை, அரும்பாக்கத்தில் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழக்கவில்லை, இறந்த பெண் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், வண்டல் மண் சேரும் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
- 2 Sept 2025 11:27 AM IST
திருச்சியில் டிரோன்கள் பறக்கத் தடை
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை ஒட்டி திருச்சியில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 2 Sept 2025 11:26 AM IST
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்துவரும் 24 மணி நேரத்தில் ஒடிசா நோக்கி செல்லும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 2 Sept 2025 11:24 AM IST
கந்து வட்டியால் நெருக்கடி பெண் எடுத்த விபரீத முடிவு
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி 45, கந்து வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டினார். கடன்காரர்கள் நெருக்கடியால் அங்குள்ள பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- 2 Sept 2025 11:12 AM IST
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திமுக எம்.பி. ஆ.ராசா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
- 2 Sept 2025 10:58 AM IST
பவன் கல்யாண் பிறந்த நாள் - பிரதமர் வாழ்த்து
ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். எண்ணற்ற மக்களின் இதயங்களிலும் பவன் கல்யாண் ஒரு முத்திரையைப் பதித்துள்ளார் என்று பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 2 Sept 2025 10:55 AM IST
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனையொட்டி அம்மன், காளி உள்ளிட்ட வேடங்கள் இடும் பக்தர்களுக்காக கிரீடம் தயாரிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.














