இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Jan 2025 1:31 PM IST
பெண் டாக்டர் பலாத்காரம், கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராய்க்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தண்டனை தொடர்பான வாதத்தின்போது, சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கும்படி சஞ்சய் ராயின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அதேசமயம், தான் குற்றம் செய்யவில்லை என்று சஞ்சய் ராய் கூறினார்.
- 20 Jan 2025 12:59 PM IST
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில், ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
- 20 Jan 2025 12:54 PM IST
“பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. நீங்கள் (தி.மு.க.) எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பா? உங்கள் நாடகத்தை பார்த்துக்கொண்டு மக்கள் இனியும் சும்மா இருக்கமாட்டார்கள். புதிய விமான விலையத்தை விளைநிலங்கள் இல்லாத இடத்தில் அமைக்கவேண்டும்” என்று விஜய் பேசினார்.
- 20 Jan 2025 12:45 PM IST
பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது: விஜய் பேச்சு
‘நான் வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வரக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் பரந்தூரில் வரக்கூடாது’ என பரந்தூர் மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.
- 20 Jan 2025 12:43 PM IST
பரந்தூர் மக்களை சந்தித்தார் விஜய்.. போராட்டத்திற்கு ஆதரவு
பரந்தூரில் தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களை விஜய் சந்தித்தார். மக்கள் மத்தியில் பேசிய அவர் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். தனது கள அரசியல் பயணம் பரந்தூர் மக்களின் ஆசீர்வாதத்துடன் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- 20 Jan 2025 11:49 AM IST
பரந்தூர் வந்து சேர்ந்தார் விஜய்
விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினரை சந்திப்பதற்காக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பரந்தூர் வந்து சேர்ந்தார்
- 20 Jan 2025 11:43 AM IST
காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்ற வாலிபருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில், அவரது காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கான தண்டனை விவரத்தை நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட்டு இன்று வெளியிட்டது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்துவை வழக்கில் இருந்து விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
- 20 Jan 2025 9:39 AM IST
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்க விஜய் புறப்பட்டார். பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து சற்றுமுன் விஜய் பரந்தூர் புறப்பட்டார்






