இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 May 2025 4:28 PM IST
மறைந்த நடிகர் ராஜேஷின் உடல், கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
- 31 May 2025 4:13 PM IST
உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்டில் புதிய வழக்கறிஞர் அறை மற்றும் வாகனங்களை நிறுத்தும் கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பங்கேற்று அதனை திறந்து வைத்துள்ளார். இதில், 2,300-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என மிக பெரிய அளவில் வாகன நிறுத்தும் வசதிகளை கட்டிடம் கொண்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, நீதி துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மாநில அரசின் முயற்சிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சுட்டிக்காட்டினார்.
- 31 May 2025 3:38 PM IST
13 கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு தொடர்பாக திமுக, அதிமுக இரண்டு தரப்பு கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், பெண்களிடம் இழிவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 31 May 2025 3:36 PM IST
வட மாநிலங்களில் கொட்டும் மழை
அசாம்,மணிப்பூர், மிசோரம், அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அசாம், மணிப்பூரில் பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.
- 31 May 2025 2:24 PM IST
சேலத்தில் கொரோனாவுக்கு இளைஞர் பலி
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பும் உயிரிழப்புக்கு காரணம் என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 31 May 2025 2:21 PM IST
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் திடீரென 70 அடி உள்வாங்கி காணப்படும் கடல். கோவில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீ. நீளத்திற்கு உள்வாங்கியது. உள்வாங்கிய பகுதியில் பச்சை படிந்த பாறைகள் மீது அச்சமின்றி பக்தர்கள் குதுகலமாக நீராடி வருகின்றனர்.
- 31 May 2025 2:15 PM IST
மறைந்த நடிகர் ராஜேஸின் இறுதி அஞ்சலி சென்னை அசோக் நகரில் உள்ள தேவாலயத்தில் நடந்து வருகிறது.
- 31 May 2025 2:12 PM IST
புதிய நிர்வாகிகள் வாழ்த்து
திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்து புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்
- 31 May 2025 2:10 PM IST
கட்சி யார் சொத்தும் கிடையாது - அன்புமணி திட்டவட்டம்
சென்னை சோழிங்கநல்லூரில் 2-வது நாளாக நடைபெற்று வரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:-
ராமதாஸ் நமது குலசாமி, குலதெய்வம். கொள்கை வழிகாட்டி. தொலைநோக்கு சிந்தனை கொண்டவர். சமூகநீதி உள்பட பல வழிகளை காட்டியவர். அவரது வழியை பின்பற்றி வெற்றி பெறுவோம். கட்சி யார் சொத்தும் கிடையாது பாமகவின் தலைவர் நான்.
பாமகவினர் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். விரைவில் குழப்பங்கள் தீரும். தேர்தலுக்கு வியூகம் வகுத்துள்ளோம். எந்த குழப்பமும் வேண்டாம். ஒன்றாக இருங்கள். எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கிடையாது. விரைவில் தமிழக மக்கள் உரிமையை மீட்பு பயணத்தை தொடங்க இருக்கிறேன். இனிவருவது நம்முடைய காலம், வெற்றிகரமாக மாநாட்டை நாம் நடத்தி உள்ளோம் என்றார்.














