குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் -அருவிகளில் உற்சாக குளியல்

காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது
தென்காசி,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் இருந்து கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருகை புரிந்தனர்.அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவிட்டு குற்றாலத்தில் உள்ள பூங்கா பகுதி மற்றும் அருவி கரைகளுக்கு செல்லும் சாலை ஓரப் பகுதிகளில் உள்ள மர நிழல்களில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்டு மகிழ்ந்து நேரத்தை செலவிட்டனர்.
குற்றாலம் மெயின் அருவியில் இருந்து ஐந்தருவி செல்லும் பகுதியில் அமைந்துள்ள வெண்ணமடை படகு குழாம் முழுமையாக நிரம்பும் தருவாயில் உள்ளதால் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என சுற்றுலா பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் சாரல் திருவிழாவும் எப்பொழுது நடைபெறும் என தேதிகள் அறிவிக்கப்படுமா? என்றும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.






