நடுவழியில் திடீரென நின்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்: காரணம் என்ன?

அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பயணி குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
மதுரையிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்லும். அதன்படி நேற்று காலை இந்த ரெயில் வழக்கம் போல் புறப்பட்டது. காலை 7.49 மணிக்கு திண்டுக்கல் வந்து அங்கிருந்து காலை 7.53 மணிக்கு மணப்பாறை நோக்கி புறப்பட்டது. இந்த ரெயில் தாமரைப்பாடி, வடமதுரை, அய்யலூர் ரெயில்நிலையங்களை கடந்து கல்பட்டிசத்திரம் ரெயில் நிலையம் அருகே காலை 8.10 மணிக்கு வந்த போது, "டி10" என்ற பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை யாரோ ஒரு பயணி பிடித்து இழுத்துவிட்டார். இதனால் ரெயில் நடுவழியில் நின்றது.
உடனே என்ஜின் டிரைவர், ரெயில் மேலாளர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் அந்த பெட்டிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து பிரேக்கிங் சிஸ்டத்தை சரிசெய்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மணப்பாறைக்கு 26 நிமிடங்கள் தாமதமாக காலை 8.50 மணிக்கு வந்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






