மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்கள்: போலீசார் விசாரணை

சமீப காலமாக ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தான முறையில் வீடியோ எடுக்கும் நிகழ்வு அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது.
சென்னை:
சென்னை மதுரவாயல் புறவழிச் சாலையில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி, அதனை ரீல்ஸ் வீடியோக்களாக எடுத்து வெளியிடுவது தொடர்கிறது.அந்த வகையில், புறவழிச் சாலையில் உள்ள பாலத்தையொட்டிய சர்வீஸ் சாலையில் ஒரு ஆட்டோ டிரைவர் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தனது ஆட்டோவை இயக்கிய டிரைவர், இடது புற சக்கரத்தை மேலே தூக்கிய நிலையில், ஆட்டோவை சாய்த்தபடி ஆபத்தான முறையில் ஓட்டுகிறார். இதனை இன்னொரு ஆட்டோ டிரைவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த காட்சிகளை ஆட்டோ டிரைவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஆபத்தான முறையில் ஆட்டோவை ஓட்டிய டிரைவர் மீது, போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.






