ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவு

ஒகேனக்கல்லுக்கு நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
தர்மபுரி,
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன.
அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இதனால் நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர் வரத்து தற்போது வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 23 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர் வரத்து குறைந்ததன் காரணமாக காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






