பெலாரஸ் உடனான எல்லையை மூடிய லித்துவேனியா - காரணம் என்ன?

லித்துவேனியா நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ளது
வில்னியஸ்,
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு லித்துவேனியா. நேட்டோ அமைப்பின் உறுப்பினரான இந்நாடு பெலாரஸ் அருகே உள்ளது. உக்ரைன் - ரஷியா போரில் லித்துவேனியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது.
இதனிடையே, பெலாரசில் இருந்து தங்கள் நாட்டு எல்லைக்குள் மர்ம பலூன்கள் பறக்கவிடப்படுவதாக லித்துவேனியா குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக, விமான நிலையங்களை குறிவைத்து இந்த பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக லுத்துவேனியாவின் தலைநகர் வில்னியஸ் உள்பட முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த ஹீலியம் பலூன்கள் மூலம் பெலாரசில் இருந்து போதைப்பொருட்கள், சிகிரெட்டுகள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக லித்துவேனியா குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், பெலாரஸ் உடனான எல்லையை லித்துவேனியா மூடியுள்ளது. மர்ம பலூன்கள் பறக்கவிடப்படுவதை பெலாரஸ் தடுத்து நிறுத்தவில்லையென்றால் இருநாட்டிற்கும் இடையேயான வர்த்தம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் லித்துவேனியா எச்சரிக்கை விடுத்துள்ளது.






