பூமத்திய ரேகையில் அதிசயம்


பூமத்திய ரேகையில் அதிசயம்
x

''இந்த உலகில் நிரந்தரமானவர் என்று எவரும் கிடையாது; நிரந்தரமானவை இயற்கையும், இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே''...

இறைவன் நமக்கு கொடுத்த அழகான பரிசுகளில் ஒன்று இயற்கை.

இறைவன் படைத்த உலகில் வாடகைக்கு குடியிருக்கும் மனிதன், ''ஒரு நாள் வீட்டை காலி செய்யப்போகிறோம்'' என்ற உண்மை தெரியாமல் விஞ்ஞானத்தின் துணை கொண்டு இயற்கையுடன் போட்டி போடுகிறான். சில விஷயங்களில் அவனுக்கு வெற்றியும் கிடைக்கிறது.

என்றாலும் சில இயற்கை நிகழ்வுகளை மனிதனால் எதிர்த்து நிற்கவோ, வெற்றி கொள்ளவோ முடியவில்லை. காற்று வீசும் திசையை மாற்றவோ, கொந்தளிக்கும் கடலை அடக்கவோ, கொட்டும் மழையை நிறுத்தவோ, வெடித்துச் சிதறும் எரிமலையை தணிக்கவோ பூகம்பத்தை தடுக்கவோ, ஆவி பிரிந்த மனிதனை உயிர்ப்பிக்கவோ இயலவில்லை. அங்குதான் இயற்கையிடம் மனிதன் மண்டியிடுகிறான்.



நம் உடல்கூட பல அதிசயங்களை உள்ளடக்கியதுதான். சூழ்நிலைக்கு ஏற்ப அது தன்னைத்தானே மாற்றிக்கொள்கிறது. ஏதாவது படித்துக்கொண்டிருக்கும் போது கையிலோ, காலிலோ கொசு அமர்ந்து கடித்தால், நம் கண்கள் அதை பார்க்காமலே கை தானாக சென்று அந்த இடத்தில் அடிக்கும். மூளையின் கட்டளைப்படி இப்படி பல அனிச்சை செயல்களை நம் உடல் பாகங்கள் தானாக செய்கின்றன.

கவனித்து இருக்கிறீர்களா?...தும்மல் வரும்போது நம் கண்கள் தாமாகவே மூடிக்கொள்ளும். தும்மலின் போது மூக்கு மற்றும் வாயில் இருந்து காற்று அதிவேகமாக வெளியேறும் போது கண்கள் முன்னே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இயற்கையாகவே இமைகள் மூடிக் கொள்கின்றன.

நாம் கண்களை மூடித் திறப்பதை, கண்ணாடியின் முன் நின்று நம்மால் பார்க்க முடியும். ஆனால் நம் கண்கள் பக்கவாட்டில் அசைவதை நம்மால் ஒருபோதும் பார்க்க முடியாது. செய்து பாருங்கள்...

முப்பத்திரண்டு பற்களுக்கும் நடுவில் இருந்தபடி அங்கும் இங்குமாக அசைந்து கொண்டே இருக்கும் நாக்கு ஒருமுறையாவது பற்களுக்கு இடையே சிக்கிக் கொள்கிறதா? இல்லையே!...

இப்படி நம் உடலிலேயே எத்தனையோ வினோதங்கள் நிகழ்கின்றன. அவற்றையெல்லாம் நாம் உன்னிப்பாக கவனிப்பதில்லை.

இதேபோல் நாம் வாழும் இந்த பூமியும் பல அதிசயங்களையும், அற்புதங்களையும் உள்ளடக்கியது. அண்டத்தில் ஏற்பட்ட பெருவெடிப்பின் மூலம் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றி இருக்கலாம் என்றும், சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமியில் மனிதர்கள் வாழ்ந்து வருவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவந்து இருக்கிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள 4-வது பெரிய கிரகமான பூமி, சூரியனில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதாவது புதன், சுக்கிரன் கிரகங்களை அடுத்து சூரியனுக்கு நெருக்கமாக உள்ள 3-வது கிரகம் பூமி.

கிட்டத்தட்ட கால்பந்து போல் கோள வடிவமாக உள்ள பூமியின் விட்டம் கிழக்கு-மேற்காக 12,756 கி.மீ. ஆகும். அதேசமயம் தெற்கு-வடக்காக விட்டத்தை அளவிடும்போது 42 கி.மீ. நீளம் குறைவாக இருக்கும். பூமியின் வட துருவமும், தென் துருவமும் சற்று தட்டையாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

வட துருவத்திலும், தென் துருவத்திலும் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளி படுவதில்லை என்பதால் அந்த பகுதிகள் பனியால் மூடப்பட்டு உள்ளன. இதனால் அவை மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த இடம் அல்ல.

பூமியின் ஒட்டுமொத்த பரப்பளவு 51 கோடி சதுர கி.மீ. இதில் 70.8 சதவீதம், அதாவது கிட்டத்தட்ட முக்கால் பங்கு கடல்தான்; மீதி 29.2 சதவீதம்தான் நிலப்பகுதி. அதாவது சுமார் 15 கோடி சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில்தான் மனிதர்கள் வாழும் குடியிருப்புகள், மலைகள், பீடபூமிகள், ஏரிகள், ஆறுகள், காடுகள் எல்லாம் உள்ளன.

பூமி தன்னைத்தானே வினாடிக்கு 460 மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டு, சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இப்படி பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் (துல்லியமாக சொல்வது என்றால் 23 மணி 56 நிமிடம்) ஆகிறது. இதைத்தான் ஒரு நாள் என்கிறோம். இதேபோல் சூரியனை ஒருமுறை சுற்றி வர 365 நாட்கள் (துல்லியமான சொல்வது என்றால் 365.25 நாட்கள்) ஆகின்றன. இதை ஓர் ஆண்டு என்கிறோம்.

புறவிசை தாக்கமின்றி பூமி நிலையான வேகத்தில், சீரான பாதையில் சுற்றி வருவதால்தான், பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லை. விமானத்தில் செல்லும்போது விமானம் பறக்கும் வேகத்தை நம்மால் எப்படி உணர முடியாதோ அதுபோல்தான் இதுவும்.

கோள வடிவமான பூமி நேராக இல்லாமல், தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக உள்ளதாலும், சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதாலும், காற்றின் அடர்த்தி மேலே செல்லச் செல்ல குறைவதாலும்தான் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.



கோள வடிவிலான பூமியை கிடைமட்டத்தில் சரிபாதியாக பிரித்தால் நடுவில் மேற்கில் இருந்து கிழக்காக ஒரு எல்லைக்கோடு வரும் அல்லவா? அதுதான் பூமத்திய ரேகை அல்லது நிலநடுக்கோடு என்று அழைக்கப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு (0 டிகிரி) தெற்கே 90 அட்சரேகைகளும், வடக்கே 90 அட்சரேகைகளும் உள்ளன. அதாவது வட முனையில் 90 டிகிரியில் ஆர்க்டிக் துருவமும், தெற்கில் 90 டிகிரியில் அண்டார்டிக் துருவமும் உள்ளன. பூமத்திய ரேகைக்கு தெற்கே 23.4 டிகிரியில் மகர ரேகையும், வடக்கே 23.4 டிகிரியில் கடக ரேகையும் செல்கின்றன.

இதேபோல் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தை மையமாக கொண்டு (0 டிகிரி) வடக்கிலிருந்து தெற்காக தீர்க்க ரேகைகள் உள்ளன.

இந்த ரேகைகள் எல்லாமே வெறும் கற்பனை கோடுகள்தான். இவற்றுக்கென்று தனியாக எந்த அடையாளமும் கிடையாது. உலகத்தில் ஒரு நாடு எங்கே, எந்த திசையில் இருக்கிறது? பூமத்திய ரேகையில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதற்காகவும், நேரத்தை கணக்கிடுவதற்காகவும், தட்பவெட்ப நிலை, காற்று வீசும் திசை போன்றவற்றை கண்டறிவதற்காகவும் இந்த கற்பனை கோடுகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் பூமத்திய ரேகை மிகவும் முக்கியமானது மட்டுமின்றி வித்தியாசமானதும்கூட. இதுதான் பூமியை தெற்கு-வடக்கு என்று இரண்டாக பிரிக்கிறது. அமெரிக்கா, கனடா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகள் பூமத்திய ரேகைக்கு வடக்கேயும்(வடஅரைக்கோளம்), ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா, சிலி, அங்கோலா, தென் ஆப்பிரிக்கா, ஜாம்பியா, பெரு உள்ளிட்ட 32 நாடுகள் பூமத்திய ரேகைக்கு தெற்கேயும் (தென்அரைக்கோளம்)அமைந்துள்ளன.

உகாண்டா, கென்யா, ஈக்வடார், கொலம்பியா, பிரேசில், சாவ் டோம் பிரின்சிபி, கபான், காங்கோ குடியரசு, ஜனநாயக காங்கோ குடியரசு, சோமாலியா, மாலத்தீவுகள், இந்தோனேசியா, கிரிபாடி ஆகிய 13 நாடுகள் பூமத்திய ரேகைக்கு வடக்கேயும் தெற்கேயும் உள்ளன. அதாவது இந்த நாடுகளின் வழியாக பூமத்திய ரேகை செல்கிறது. கடல்களை பொறுத்தமட்டில் அட்லாண்டிக், பசிபிக், இந்திய பெருங்கடல் வழியாக பூமத்திய ரேகை செல்கிறது.

பூமத்திய ரேகையில் அமைந்துள்ள 13 நாடுகளிலும், பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள நாடுகளிலும் வெப்பம் அதிகமாக இருக்கும். மேலும் பூமத்திய ரேகை நாடுகளில் சூரிய உதயமும், அஸ்தமனமும் குறைந்த நிமிடங்களே நீடிக்கும்.

பூமத்திய ரேகைதான் பூமியின் அதிகபட்ச சுற்றளவு கொண்ட இடம் என்பதால், அந்த இடத்தில் பூமியின் சுழற்சி வேகம் அதிகமாக இருக்கும். இந்த சுழற்சி வேகம் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக நீர் சுழலும் தன்மையை மாற்றுகிறது. இதற்கு காரணம் 'கோரியோலிஸ் விளைவு' என்கிறார்கள்.

அது என்ன கோரியோலிஸ் விளைவு?

பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுழலும் போது பூமத்திய ரேகைக்கு வட பகுதியில் உள்ள காற்று வலதுபுறமாகவும், தென்பகுதியில் உள்ள காற்று இடதுபுறமாகவும் இழுக்கப்படுகிறது. இதைத்தான் 'கோரியோலிஸ் விளைவு' என்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான், பூமத்திய ரேகைக்கு வடக்கே தண்ணீர் வலதுபுறமாகவும், பூமத்திய ரேகைக்கு தெற்கே தண்ணீர் இடதுபுறமாகவும் சுழல்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதேசமயம் பூமத்திய ரேகையில் 'கோரியோலிஸ் விளைவு' பூஜ்ஜியமாக இருக்கும் என்பதால் அந்த இடத்தில் நீர் சுழற்சி இருப்பதில்லை என்றும் சொல்கிறார்கள்.

பூமத்திய ரேகைக்கு வடக்கே உருவாகும் புயல்கள் இடதுபுறமாகவும், தெற்கே உருவாகும் புயல்கள் வலதுபுறமாகவும் சுழல்வதற்கு இந்த கோரியோலிஸ் விளைவே காரணம் ஆகும்.

பூமத்திய ரேகை செல்லும் 13 நாடுகளில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள உகண்டாவும் ஒன்று. இங்கு பூமத்திய ரேகை செல்லும் ஓர் இடத்தில் அதை நினைவுபடுத்தும் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு, பூமத்திய ரேகையை குறிக்கும் கோடும் வரையப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் நீர் சுழற்சி சோதனையை செய்து காட்டுகிறார்கள்.

முக்காலி போன்ற ஒரு ஸ்டாண்டில் துளையிடப்பட்ட வட்டமான பெரிய பேசினை (குழிவான அகன்ற பாத்திரம்) வைக்கிறார்கள். துளையை அடைத்துக்கொண்டு பேசினில் தண்ணீரை நிரப்பி அதன் நடுவில் ஒரு பூவை போடுகிறார்கள். பின்னர் அந்த துளையில் உள்ள அடைப்பை நீக்கி விடுகிறார்கள். அப்போது தண்ணீருடன் சேர்ந்து சுழன்றபடி அந்த பூ கீழே இறங்குகிறது. அங்கு வரையப்பட்டுள்ள பூமத்திய ரேகை கோட்டுக்கு ஒன்றிரண்டு அடி வடக்கே வைத்து இந்த பரிசோதனையை செய்யும் போது தண்ணீருடன் சேர்ந்து பூ வலதுபுறமாக (கெடிகார முள் சுற்றும் திசையில்) சுழன்றபடி கீழே இறங்குகிறது. பூமத்திய ரேகை கோட்டுக்கு ஒன்றிரண்டு அடி தெற்கே வைத்து இந்த பரிசோதனையை செய்யும் போது தண்ணீருடன் சேர்ந்து பூ இடதுபுறமாக (கெடிகார முள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில்) சுழன்றபடி கீழே இறங்குகிறது.

அதேசமயம், சரியாக பூமத்திய ரேகை கோட்டில் வைத்து இந்த பரிசோதனையை செய்யும் போது பேசினில் உள்ள தண்ணீர் எந்த திசையிலும் சுழலாமல் நேராக கீழே இறங்குகிறது. அதனுடன் சேர்ந்து பூவும் சுழலாமல் கீழே இறங்குகிறது.

இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதை பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அங்குள்ளவர்கள் இந்த பரிசோதனையை செய்து காட்டுகிறார்கள். அப்படி பார்த்துச் செல்பவர்களுக்கு ஒரு சான்றிதழும் வழங்கிறார்கள். இதற்கு கட்டணமாக அந்த நாட்டு பணம் 20 ஆயிரம் 'ஷில்லிங்' (இந்திய மதிப்பில் சுமார் 500 ரூபாய்) வாங்கப்படுகிறது.

இந்த பரிசோதனையை செய்து காட்டுபவர்கள், பூமத்திய ரேகைக்கு வடக்கே அமைந்துள்ள நாடுகளில் இப்படி தண்ணீர் வலதுபுறம் சுழன்றவாறு கீழே இறங்கும் என்றும், இதேபோல் பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள நாடுகளில் தண்ணீர் இடதுபுறம் சுழன்றவாறு கீழே இறங்கும் என்றும் கூறுகிறார்கள்.

அதேசமயம், பூமத்திய ரேகை செல்லும் எந்த இடத்திலும் நின்று கொண்டு அடியில் திறப்புடன் கூடிய வட்டமான அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி பின்னர் திறப்பை அகற்றினால், அந்த தண்ணீர் சுழலாமல் நேராக கீழே இறங்கும் சொல்கிறார்கள்.

அங்கு வருபவர்கள் பூமத்திய ரேகை நினைவுச்சின்னத்தில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் பூமியின் தென்பாதியில் ஒரு காலையும், வடபாதியில் ஒரு காலையும் வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். வித்தியாசமான அந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

இதேபோன்று பூமத்திய ரேகை செல்லும் மற்ற நாடுகளிலும் அந்த இடத்தில், ''இதுதான் நிலநடுக்கோடு செல்லும் இடம்'' என்று குறிப்பிட்டு நினைவுச்சின்னங்களை அமைத்து இருக்கிறார்கள்.

வீட்டில் கைகழுவும் வட்ட வடிவிலான 'வாஷ்பேசினில்' அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருக்கும் போது, அந்த அடைப்பை நீக்கினால் தண்ணீர் சுழன்றபடி வேகமாக கீழே இறங்கும். அந்த தண்ணீர் பெரும்பாலும் வலதுபுறமாக அதாவது கடிகார முள் சுற்றும் திசையில் சுழன்றபடி கீழே இறங்குவதை காணலாம். கழிவறையில் தேங்கி நிற்கும் தண்ணீர் மொத்தமாக இறங்கும் நீரும் இப்படி சுழன்றபடிதான் உள்ளே செல்லும். இதேபோல் மற்ற இடங்களிலும் தேங்கி நிற்கும் தண்ணீர் ஒரு சிறு திறப்பு வழியாக வெளியேறும் போது சுழன்றபடி இறங்குவதை பார்க்க முடியும்.

ஆனால் சில விஞ்ஞானிகள் இந்த பரிசோதனை குறித்து வேறு விதமாக கூறுகிறார்கள். வாஷ் பேசின், குளியல் நீர் தொட்டி போன்ற குறைந்த அளவிலான நீர் தேங்கும் இடங்களில் இந்த 'கோரியோலிஸ் விளைவு' ஏற்படுத்தும் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும், வாஷ் பேசின், குளியல் நீர் தொட்டி போன்றவற்றின் அமைப்பை பொறுத்தே அதில் இருந்து இறங்கும் தண்ணீரின் சுழற்சி அமையும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பூமத்திய ரேகையும் ராக்கெட் ஏவுதளமும்


செயற்கை கோள்களை ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்புவதற்கு மிகவும் உகந்த இடம் பூமத்திய ரேகை பகுதிதான்.

இதனால்தான் ஒவ்வொரு நாடும் முடிந்த அளவுக்கு தங்கள் ஏவுதளத்தை பூமத்திய ரேகைக்கு அருகே அமைக்கின்றன. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள கேப் கேனவரல், தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு, பிரேசிலின் அல்ஹடாரா ஆகிய ஏவுதளங்கள் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ளன.

இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவும் ஓரளவு பூமத்திய ரேகைக்கு அருகேதான் உள்ளது. இன்னும் அருகே இருக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு காரணம் என்ன?

பூமியின் சுழற்சி வேகம் பூமத்திய ரேகை பகுதியில் மணிக்கு 1,650 கி.மீ. ஆகும். இந்த வேகம் வடக்கே ஆர்க்டிக் துருவத்தையும், தெற்கே அண்டார்டிக் துருவத்தையும் நோக்கி செல்லச் செல்ல குறையும்.

ஒரு குடையை விரித்து பிடித்தபடி அதன் கம்பியை சுழற்றினால், விரிந்த அதன் கீழ்ப்பகுதி வேகமாகவும் மேலே செல்லச் செல்ல அதன் குறுகிய பகுதி மெதுவாகவும் சுழலும் அல்லவா? அதுபோல்தான் பூமியின் சுழற்சி வேகமும் உள்ளது.

பூமத்திய ரேகை பகுதியில் புவியீர்ப்பு விசை குறைவாக இருக்கும் என்பதாலும், அந்த பகுதியில் பூமி சுழலும் வேகம் அதிகம் என்பதாலும் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு கூடுதல் உந்து சக்தி கிடைக்கும். இது, ராக்கெட் பூமியின் ஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபட்டு எளிதாக விண்ணை நோக்கி செல்வதற்கு உதவியாக இருக்கும். அத்துடன் ராக்கெட்டுக்கான எரிபொருள் செலவும் குறையும்.

மேலும், பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுழல்வதால் அந்த சுழற்சி வேகம் ராக்கெட்டை உந்தித்தள்ள உதவும் வகையில், எல்லா ராக்கெட்டுகளும் கிழக்கு நோக்கியே செலுத்தப்படுகின்றன. அவை குறிப்பிட்ட உயரம் சென்ற பிறகுதான் மேல் நோக்கி திருப்பப்படுகின்றன.

அத்துடன், பாதுகாப்பு கருதியே ராக்கெட் ஏவுதளங்களை கடற்கரை பகுதியில் அமைக்கிறார்கள். விண்ணில் செலுத்தும் போது ஏதாவது கோளாறு ஏற்பட்டால், ராக்கெட் கடலில் விழுந்துவிடும். அதே நிலப்பகுதியாக இருந்தால் பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பூமியின் ஜாதகம்



சுற்றளவு (பூமத்திய ரேகையில்) - 40,075 கி.மீ.

சுற்றளவு (வடக்கு-தெற்காக) - 40,008 கி.மீ.

விட்டம் (கிழக்கு-மேற்காக) - 12,756 கி.மீ.

விட்டம் (வடக்கு-தெற்காக)- 12,714 கி.மீ.

பரப்பளவு - 51 கோடி சதுர கி.மீ.

சூரியனில் இருந்து சராசரி தூரம் - 14,95,98,262 கி.மீ.

வயது - 450 கோடி ஆண்டுகள்

சூரியனை சுற்றும் வேகம் மணிக்கு - 1,07,200 கி.மீ. (வினாடிக்கு 29.78 கி.மீ.)

வெப்பம் மிகுந்த பகுதி - லிபியாவில் உள்ள எல் அஜிசியா. இங்கு 1922-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 136 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.


நள்ளிரவிலும் சூரியன்



•பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் இரவும், பகலும் சமமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 22 ஆகிய தேதிகளில் சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக வருவதால் அந்த இரு நாட்களும் இரவும், பகலும் சரியாக 12 மணி நேரமாக இருக்கும்.

•கோடை காலத்தில் பகல் நேரம் சற்று அதிகமாகவும், குளிர் காலத்தில் இரவுப் பொழுது சற்று அதிகமாகவும் இருக்கும்.

•துருவப்பகுதியை நோக்கி செல்லச் செல்ல இந்த வேறுபாடு அதிகரிக்கும். உதாரணத்துக்கு வட பகுதியில் ஆர்டிக் துருவத்தையொட்டி அமைந்துள்ள நார்வே நாட்டில் நவம்பர் முதல் ஜனவரி வரை சூரியன் உதித்த சில மணி நேரத்தில் அஸ்தமனமாகிவிடும். இதனால் பகல் பொழுது மிகவும் குறைவாகவும், இரவுப் பொழுது மிகவும் அதிகமாகவும் இருக்கும். அதேசமயம் மே முதல் ஜூலை மாதத்தின் பிற்பகுதி வரை பகல் பொழுது 20 மணி நேரம் வரை நீடிக்கும். இரவுப்பொழுது வெறும் 4 மணி நேரம்தான். இதனால்தான் நார்வேயை 'நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு' என்கிறார்கள்.

•இதேபோல் ஐஸ்லாந்து தீவில் ஜூலை மாதத்தில் நள்ளிரவிலும் சூரியன் மறையாது.

•அமெரிக்காவுக்கு சொந்தமான அலாஸ்காவில் உள்ள பாரோ என்ற இடத்தில் மே பிற்பகுதியில் இருந்து ஜூலை இறுதி வரை கிட்டத்தட்ட நாள் முழுவதும் சூரியனை பார்க்கலாம். நவம்பர் முதல் ஒரு மாத காலம் சூரியனையே காண முடியாது.

•பின்லாந்தில் கோடை காலத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை. குளிர் காலத்தில் சூரியனையே பார்க்க முடியாது.

•சுவீடன் நாட்டில் மே முதல் ஆகஸ்டு இறுதி வரை அதிகாலை 4 மணிக்கே சூரியன் உதித்துவிடும். மறைய நள்ளிரவு ஆகிவிடும்.


சூரிய குடும்பம்



•நாம் வாழும் இந்த பூமி சூரிய குடும்பத்தின் அங்கத்தினர்களில் ஒன்று. புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகரங்கள் இந்த குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள். சிறிய கிரகமான 'புளூட்டோ'வும் இந்த பட்டியலில் இருந்தது. ஆனால் ''உனக்கு அந்த தகுதி இல்லை'' என்று கூறி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புளூட்டோவை சூரிய குடும்பத்தில் இருந்து சர்வதேச வானியல் ஆய்வு சங்கம் நீக்கிவிட்டது. பாவம்... புளூட்டோ!...

•பொதுவாக ஒரு கோளை கிரகமாக அங்கீகரிக்க வேண்டும் என்றால், அது கோள வடிவில் இருப்பதோடு, அது சூரியனை சுற்றி வரவேண்டும். அத்துடன் அந்த கோளின் சுற்றுப்பாதை தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் புளூட்டோவின் சுற்றுப்பாதை தெளிவாக இல்லாததால் அது கிரகமாக அங்கீகரிக்கப்படவில்லை.

•எல்லையில்லா இந்த பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தைப் போல் எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. ஆனால் அவை இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. இதுவரை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவையான காற்றும், நீரும் பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலும் இல்லாததால் அங்கு உயிரினங்கள் வாழ்வதாகவோ, அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவோ தெரியவில்லை.

•வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாகவும், பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் அவர்கள் எப்போதாவது பூமிக்கு வந்து செல்வதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. இதைவைத்து சினிமா படங்களும் வந்துள்ளன.

•பூமியை சுற்றிலும் வளிமண்டலம் (காற்று) உள்ளது. மேலே செல்லச் செல்ல இதன் அடர்த்தி குறைந்து கொண்டே போகும். 11 கி.மீ. உயரத்தில் காற்றின் அடர்த்தி தரையில் இருப்பதை போல் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கும். குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் காற்று இல்லாமல் போய்விடும்.


Next Story