141 ரன்கள் குவித்தபோதும் தந்தை திருப்தியடையவில்லை; அபிஷேக் சர்மா

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின.
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் 18.3 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார்.
அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டிக்குப்பின் பேசிய அபிஷேக் சர்மா, 141 ரன்கள் குவித்தபோதும் தனது அப்பா ராஜ்குமார் சர்மா திருப்தியடையவில்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் ஆடும்போதில் இருந்தே எனது அப்பா போட்டியை காண மைதானத்திற்கு வருவார். எனது ஆட்டத்தின்போது எனது தந்தையை கேமரா மூலம் வீடியோ எடுக்கும்போது அவர் எனக்கு எப்படி பேட்டிங் ஆடவேண்டுமென்று சிக்னல் கொடுத்துக்கொண்டே இருப்பார். அவர்தான் என் முதல் பயிற்சியாளர். எனது தாயார், தந்தை முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுதான் எனது அதிகபட்ச ரன். நான் 141 ரன்கள் குவித்தபோதும் எனது தந்தை திருப்தியடையவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஆட்டத்தின் இறுதிவரை நின்று அணியின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கூறுவார். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வேன். தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்' என்றார்.






