இந்தியா அசத்தல் பந்துவீச்சு... விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 176 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அசத்தல் பந்துவீச்சு... விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா
Published on

கட்டாக் ,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும் (28 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 10 ரன்களுடனும் (5 பந்துகள்) களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், லுதோ சிபாம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரது 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் (14 ரன்) சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் போல்டானார். தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் கைப்பற்றி கடும் நெருக்கடி கொடுத்தனர்.

பின்னர் வந்த டேவிட் மில்லர் (1 ரன்), டோனோவன் பெரீரா (5 ரன்கள்), மார்கோ ஜான்சன் (12 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பிரெவிஸ் நம்பிக்கை அளிக்கும்படி விளையாடி வருகிறார்.

தற்போது வரை தென் ஆப்பிரிக்க அணி 9.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களுடன் தடுமாறி வருகிறது. பிரெவிஸ் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார். அசத்தலாக பந்துவீசிய இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா இன்னும் 11.1 ஓவர்களில் 108 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com