ஐ.பி.எல்.2025: மும்பை அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு

ஐதராபாத் அணிக்கு எதிராக போட்டியில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.
மும்பை,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.
அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சார்பில் முதலாவதாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் ஓவரின் முதல் பந்திலே அபிஷேக் சர்மா கொடுத்த கேட்சை பிடிக்க மும்பை அணியினர் தவறினர். அடுத்து கொடுத்த மற்றொரு கேட்சையும் மும்பை வீரர்கள் தவறவிட்டநிலையில் அதை பயன்படுத்தி அவர் அதிரடியாக ஆடத்தொடங்கினார். இந்நிலையில் சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 40 (28) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 2 ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ஒரளவு தாக்குப் பிடித்த டிராவிஸ் ஹெட் 28 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக நிதிஷ் குமார் ரெட்டியுடன், ஹென்ரி கிளாசன் ஜோடி சேர்ந்தார். ஒரளவு ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து அதிரடி காட்டி வந்த ஹென்ரி கிளாசன் 37 (28) ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் அதிரடி காட்டிய அன்கிட் வர்மா 18 (8) ரன்களும், பேட் கம்மின்ஸ் 8 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா மற்றும் போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.