தோல்வியால் கண்ணீர் விட்ட மரிஜானே காப்.. இந்திய வீராங்கனைகள் செய்த செயல்.. வீடியோ வைரல்


தோல்வியால் கண்ணீர் விட்ட மரிஜானே காப்.. இந்திய வீராங்கனைகள் செய்த செயல்.. வீடியோ வைரல்
x

Image courtesy:ICC

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது.

மும்பை,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின.

மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வோல்வார்ட் 101 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளும் அள்ளினர்.

வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்திய பெண்கள் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய மகளிர் அணியினரும் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் அதே சமயம் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் தோல்வியால் துவண்டு போயிருந்தனர். அந்த அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான மரிஜானே காப் தோல்வியால் கண்ணீர் விட்டார்.

அதனை கண்ட இந்திய அணியின் ராதா யாதவ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கலக்கமடைந்த மரிஜானே காப்பை ஆறுதல்படுத்தினர். இந்த நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெமிமா, காப் மற்றும் ராதா யாதவ் மூவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணிக்காக ஒன்றாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story