இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் ?

முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணை பிசிசிஐ அணுகியதாக தகவல்கள் வெளியாகின.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும்.
கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பணியாற்றுகிறார். அவரது பயிற்சியின் கீழ் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி பிரமாதமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சரிவுக்குள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் பயிற்சியாளராக, கம்பீருக்கு பதிலாக முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணை பிசிசிஐ அணுகியதாகதகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்யா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
‘டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருவதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை. யூகத்தின் அடிப்படையிலானது. அதில் துளியும் உண்மையில்லை. 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிவரை கம்பீரின் ஒப்பந்தம் உள்ளது. ஒப்பந்தபடி தொடருகிறார்’ என்றார்.






