

அபுதாபி,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதில் இலங்கை நிர்ணயித்த 134 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 2-வது தோல்வியை தழுவிய இலங்கை அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது.
தோல்விக்கு பின்னர் இலங்கை கேப்டன சாரித் அசலங்கா கூறுகையில், தொடக்க ஆட்டக்காரர்களிடம் இருந்து சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனாலும் பவர்-பிளேயில் 50 ரன் எடுத்தோம். அந்த சமயம் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் ஓரளவு நல்ல நிலையில் தான் இருந்தோம். அதன் பிறகு நானும் (20 ரன்), தசுன் ஷனகாவும் (0) அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தது தான் பெரும் பின்னடைவாகி விட்டது.
அதனால் தோல்விக்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டும். முதல் 10 ஓவருக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக மீண்டு வருவது மிகவும் கடினம். 133 ரன்கள் போதுமான ஸ்கோர் அல்ல. ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. கடைசி வரை முழு உத்வேகத்துடன் போராடிய விதம் பெருமை அளிக்கிறது.
சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா (2 விக்கெட் வீழ்த்தினார்) வெள்ளைநிற பந்தில் சூப்பர் ஸ்டார். அணிக்காக நிறைய பங்களிப்பை அளித்துள்ளார். தொடர்ந்து தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். சரியான அணி கலவையை உருவாக்குவதில் நிறைய பிரச்சினை இருக்கிறது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக அதை சரி செய்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.