209 ரன்கள் குவித்தும் தோல்வியடைய காரணம் என்ன..? - குஜராத் கேப்டன் சுப்மன் கில் விளக்கம்

image courtesy:twitter/@IPL
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் தோல்வியடைந்தது.
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விளக்கமளித்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், "பவர்பிளேயிலேயே அவர்கள் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்து விட்டனர். அதற்கான பெருமை அவர்களுடைய தொடக்க ஆட்டக்காரர்களையே சேரும். நாங்கள் சிறப்பாக செய்திருக்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தன. ஆனால் வெளியே உட்கார்ந்து அந்த விஷயங்களை சொல்வது மிகவும் எளிது. சில வாய்ப்புகள் எங்களுக்கு வந்தன. ஆனால் அவற்றைப் பிடிக்க முடியவில்லை.
பின்னோக்கிப் பார்க்கும்போது, ஒரு குழுவாக நாங்கள் செயல்பட வேண்டிய சில பகுதிகள் உள்ளன என்று நினைக்கிறேன். என் முதுகில் சிறிய பிடிப்பு ஏற்பட்டது. அதனால்தான் பீல்டிங் செய்ய வரவில்லை. அடுத்த போட்டி அகமதாபாத்தில் உள்ளது. நாங்கள் அங்கு நல்ல வெற்றிகளை பெற்றுள்ளோம், எனவே அதைத் தொடர முடியும் என்று நம்புகிறோம். இது வைபவ் சூர்யவன்ஷியின் நாள். அவரது ஹிட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் தனது நாளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்" என்று கூறினார்.






