மழலை மொழி 'ஸ்பெஷலிஸ்ட்'


மழலை மொழி ஸ்பெஷலிஸ்ட்
x

பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறி வதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, ‘ஸ்பீச் தெரபி’. ‘ஸ்பீச் தெரபி’ படிப்பில் முதுகலை பட்டம் பயின்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி, சமூக வலைத்தளத்தில் பிரபலமான ‘ஸ்பீச் ஸ்பெஷலிஸ்ட்’.

''பிஞ்சு குழந்தைகளின் பேச்சு, யாருக்குத்தான் பிடிக்காது. கொஞ்சலும், குலாவலுமாக ஆரம்பமாகும் மழலை மொழி... வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியானதாகவும், தெளிவானதாகவும் மாறும். ஆனால் நூற்றில் ஒரு குழந்தை, இயல்பில் இருந்து மாறுபட்டு, பேச்சில் தடுமாறுவார்கள். சிலர் பேசவே ஆரம்பித்திருக்கமாட்டார்கள். சிலர் திக்கித் திக்கி பேசுவார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகும்கூட உளறல் மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். இவை பெற்றோர்களால் நிச்சயம் கவனிக்கவேண்டிய விஷயம்'' என்று அழுத்தம் திருத்தமாக பேச ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி.

'ஸ்பீச் தெரபி' படிப்பில் முதுகலை பட்டம் பயின்றிருக்கும் இவர், சமூக வலைத்தளத்தில் பிரபலமான 'ஸ்பீச் ஸ்பெஷலிஸ்ட்'. குழந்தைகள் ஏன் திக்கித் திக்கி பேசுகிறார்கள், ஏன் சில குழந்தைகளின் பேச்சு புரிவதில்லை, குழந்தைகளால் சரளமாக பேச முடியவில்லையா...?, என்ன செய்தால் நன்றாக பேசுவார்கள், திக்கு வாய் பிரச்சினைக்கு என்ன பயிற்சி கொடுக்கலாம்... என்பது போன்ற பல வீடியோக்களை, யூ-டியூப் தளத்தில் தெறிக்கவிட்டு, பல மழலைகளின் குரல் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார்.

இவர், ஸ்பீச் தெரபி பற்றியும், மழலை மொழியை மேம்படுத்துவது குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.

''பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறி வதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, 'ஸ்பீச் தெரபி'. அதாவது, ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும். உளறல் மொழியோ, அம்மாவிற்கு மட்டுமே புரியும் சிறப்பு மொழியோ எதுவாக இருந்தாலும் சரி... ஒரு வயதிற்குள் குழந்தைகள் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். அதேபோல ஒரு பொருளை சுட்டிக்காட்டி, சைகை மொழியிலும் உணர்த்தவேண்டும். அதேபோல, 2 வயதிற்குள் குழந்தைகள் 'அம்மா வா', 'வெளியே போகலாம்'... போன்ற 2 வார்த்தை மொழிகள் பேச வேண்டும். பள்ளி செல்லும் முன்பாக குழந்தைகள், நம்முடைய கேள்விகளுக்கு சிந்தித்து பதில் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் பின்னடைவுகள், குறைகள் இருந்தால், அது அவர்களின் குரல் வளத்திற்கு ஆபத்தாக முடியலாம்'' என்று பொறுப்பாக பேசும் வைஷ்ணவி, இந்த விழிப்புணர்வை பல்வேறு தளங்களில் ஏற்படுத்தி வருகிறார். ஆன்லைன், ஆப்லைன் என இவரது விழிப்புணர்வு முயற்சிகள் பல குடும்பங்களை சென்றடைந்திருக்கின்றன. அதனால், பல குழந்தைகளின் பேசும் திறன் 5 வயதிற்குள்ளாக சீராக்கப்பட்டிருக்கிறது.

''நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இங்குதான், குழந்தைகளின் பேசும் திறன் குறைய ஆரம்பிக்கிறது. திக்கு வாய், வார்த்தைகளை இழுத்து பேசும் பழக்கம்... போன்றவை உருவாகின்றன'' என்பவர், பெற்றோர்களை 'அலர்டாக' வைத்திருக்கும் நோக்கில், வயதிற்கு ஏற்ப மழலைகளின் பேசும் திறன் குறித்த தகவல்களை அடிக்கடி யூ-டியூப் வீடியோக்களாகவும், ரீல்ஸ் வடிவிலும் பகிர்ந்து கொள்கிறார்.

''கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஏனெனில், கொரோனா காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் அவர்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி இருந்ததால், சமூக உறவுகளோடு பேசிப் பழகும் ஆற்றல் குறைந்துவிட்டது. உரையாடுதல் குறைந்துபோனதால், அவர்களது பேசும் திறனும், பேச்சு வழக்கும் குறைப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை கண்டறிவது சுலபம்.

அவர்கள், பெரும்பாலும் மவுனமாகவே இருந்துகொண்டு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு தலை அசைவின் மூலமாகவும், ஓரிரு வார்த்தைகள் மூலமாகவும் பதிலளிப்பார்கள். உரையாடலின் உயிர் அங்கமான, கண் பார்த்து பேச விரும்ப மாட்டார்கள். சொல்ல நினைப்பதை, முறையாக சொல்ல முடியாமல், உளறுவார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு, ஸ்பீச் தெரபி நிச்சயம் தேவைப்படும். அப்போதுதான், அவர்களது பேச்சு திறன் மேம்படும்'' என்பவர், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தென்படும் பேச்சு குறைபாடுடன் கூடிய குழந்தைகளுக்கு இலவச பேச்சு பயிற்சியும் வழங்குகிறார். இதுவரை 250-க்கும் மேற்பட்ட மழலைகளின் மொழியை சீராக்கி இருக்கிறார்.

''எளிமையான பேச்சுப்பயிற்சியும், கவனத்தை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியும்... இதுபோன்ற குறைபாடுகளை சீராக்கிவிடும். உளறல் மொழியை, ஊர் ரசிக்கும் மழலை மொழியாக மாற்ற முடியும். ஆனால், குழந்தை களுக்கு இப்படியொரு குறைபாடு இருக்கிறது என்பதை, நாம் எவ்வளவிற்கு எவ்வளவு துரிதமாக கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவிற்கு துரிதமாக சீராக்கலாம். ஏனெனில், குறைபாடுகள் மெதுவாக வளரும்போதே, அதை கவனிக்கும்பட்சத்தில் லேசான பயிற்சிகளை கொண்டே சீராக்கிவிட முடியும். இல்லாதபட்சத்தில், குறைபாட்டின் வீரியத்திற்கு ஏற்ப பயிற்சிகளும், செலவுகளும் வீரியமாக இருக்கும்'' என்பவர் திக்குவாய் குறைபாட்டிற்கும், குரல் பயிற்சிகளின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்.

''திக்கு வாய் பிரச்சினைகளை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் வீரியத்தை வெகுவாக குறைத்துவிடலாம். என்னுடைய தோழிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும் 'அந்தாதி ரீஹாப்' அமைப்பின் மூலமாக இதுவரை நிறைய பேருக்கு, குரல் குறைபாடுகளை சீராக்கி இருக்கிறோம். இயல்பான குழந்தைகள் மட்டுமின்றி, ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சிகளை வழங்கி, அவர்களை இயல்பானவர்களை போல பேச வைத்திருக்கிறோம்'' என்றவர், தன்னுடைய லட்சியமாக ஒன்றை குறிப்பிடுகிறார்.

''வெளிநாடுகளில், ஒரு பழக்கம் உண்டு. அதாவது வயதிற்கு ஏற்றார்போல தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்வதை போலவே, வயதிற்கு ஏற்ப தங்கள் குழந்தைகள் சிறப்பாக பேசுகிறார்களா...? என்பதை சோதித்து கொள்வார்கள். அந்த பழக்கம் நம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திற்குள்ளும் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நம் சமூகத்திற்குள் மவுனமாக புகுந்திருக்கும் பேச்சு திறன் குறைபாட்டையும், திக்கு வாய் பிரச்சினைகளையும் அடியோடு அழிக்க முடியும். மேலும், பேச்சு குறைபாடு பற்றி பள்ளி ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும். ஏனெனில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, அவர்களே குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி பழகுகிறார்கள். இதுபற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் உண்டாக்கி, குழந்தைகளை பேச்சுத்திறன் கொண்டவர்களாக மாற்றுவதே என்னுடைய லட்சியம். அதற்காகவே, ஆன்லைன், ஆப்லைன் என பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறேன்'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.


Next Story