ஓவியத்தின் வரலாறு


ஓவியத்தின் வரலாறு
x

ஓவியத்துக்கு என மிக நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் குகையில் இருந்து தான் ஓவியங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.

ஓவியம் என்பதை தூய தமிழில் சித்திரம் என்று சொல்வார்கள். வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் உருவாக்கிய கலைப்பொருட்களில் இருந்தே ஓவியத்தின் வரலாறு தொடங்குகிறது. ஓவியம் என்பது எல்லா பண்பாடு, கலாசாரம், பாரம்பரியத்தை தழுவி வெளிக்காட்டுவதாக இருந்து வருகிறது. ஆப்பிரிக்க ஓவியம், இஸ்லாமிய ஓவியம், இந்திய ஓவியம், சீன ஓவியம், ஜப்பானிய ஓவியம் ஆகியவை மேற்கத்திய ஓவிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவை. உலகிலேயே மிக பழமையான ஓவியங்கள் என்றால் பிரான்சில் உள்ள குரோட்டே சோவெட்டில் அமைந்திருக்கும் ஓவியங்கள் தான் என்று கூறப்படுகிறது. அந்த ஓவியங்கள் வரையப்பட்டு 32,000 ஆண்டுகள் ஆகின்றனவாம். அந்த ஓவியங்கள் வரையப்பட்டவையா? அல்லது செதுக்கப்பட்டவையா? என்று இன்றளவும் பலருக்கு சந்தேகங்கள் எழுகின்றன. அந்த அளவிற்கு கலை நுணுக்கத்துடன், ஓவியங்கள் காணப்படுகின்றன. வேட்டைக்காட்சிகளாக அமைந்துள்ள ஓவியங்களை இன்றளவும் மக்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.

ஓவியத்துக்கு என மிக நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் குகையில் இருந்து தான் ஓவியங்கள் தோன்றியதாக அதாவது அக்கால மனிதர்கள் குகைகளில் வரைந்த ஓவியங்கள் தான் முதன்மையானவை என்றும், அதிலிருந்து தான் ஓவியக்கலை தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சான்றாக ஸ்பெயின் நாட்டில் உள்ள ஆல்டமிரா குகை ஓவியங்கள் மற்றும் இந்தியா, ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் காணப்படும் குகை ஓவியங்கள் விளங்குகின்றன.


Next Story