விஞ்ஞானிகளை போற்றுவோம்


விஞ்ஞானிகளை போற்றுவோம்
x

‘போலியோ’ நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர், டாக்டர் ஜோனஸ் ஷால்க். தன்னுடைய மருந்து கண்டு பிடிப்புக்கு ‘காப்புரிமை’ பெறவில்லை.

இளம்பிள்ளை வாதம் என்று சொல்லப்படும் 'போலியோ' நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர், டாக்டர் ஜோனஸ் ஷால்க். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிக்கு உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். அவரை நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இவர் தன்னுடைய போலியோ மருந்து கண்டு பிடிப்புக்கு 'காப்புரிமை' பெறவில்லை.

காப்புரிமை என்பது, தன்னுடைய கண்டுபிடிப்புக்கான, தனக்குரிய பொருளுக்கான உரிமம் ஆகும். இதனை அந்த நபரின் அனுமதியில்லாமல் வேறு எவரும் பயன்படுத்த முடியாது. ஆனால் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் ஷால்க், அதற்கான காப்புரிமையை பெற விரும்பவில்லை. அப்படி அவர் காப்புரிமை பெற்றிருந்தால், மிகப் பெரிய பணக்காரராக இருந்திருப்பார். ஆனால் தன்னுடைய கண்டுபிடிப்பு பல கோடி ஏழை, எளிய மக்களுக்கு பயன்பட வேண்டும். அவர்களும் மருந்தை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார்.

"நீங்கள் ஏன் உங்கள் கண்டுப்பிடிப்பு மருந்திற்கு காப்புரிமை பெறவில்லை" என்று பலரும் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில், "சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா? என் கண்டுபிடிப்பும் அதுபோன்றதுதான். சூரியன் உலக மக்களுக்கு பயன்தருவது போல, என்னுடைய மருந்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்க வேண்டும்" என்றார் அந்த மனிதநேயம் மிக்க மாமனிதர். இதுபோன்ற விஞ்ஞானிகளை நினைவில் வைத்து போற்ற வேண்டியது, மக்களின் கடமை.


Next Story