சஞ்சீவினி மூலிகை


சஞ்சீவினி மூலிகை
x

இமயமலையில் வளரும் ஒரு மூலிகைச்செடி உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராணத்தில் கூறப்படும் சஞ்சீவினியைப் போன்றதொரு மூலிகை இது.

அத்துடன் மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ப உடலை தகவமைத்து கொள்ளவும், கதிரியக்க பாதிப்பை தடுக்கவும் இந்த மூலிகை உணவு உதவுவதாக தெரியவந்துள்ளது.

ராமாயணத்தில் லட்சுமணனை காப்பாற்ற அனுமன் கொண்டுவந்த சஞ்சீவினி மூலிகை இப்போதும் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரோடியோலா மூலிகைச் செடிதான் ராமாயணத்தில் சஞ்சீவினி என்று குறிப்பிடப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லடாக் பகுதி மக்களிடையே இந்த மூலிகைக்கு 'சோலோ' என்று பெயர். இதன் நற்பண்புகள் பற்றி அங்குள்ளவர்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. அதேநேரம், இந்தச் செடியின் இலையைக் கீரை போலச் சமைத்து இப்பகுதி மக்கள் உண்கின்றனர். லே பகுதியைச் சேர்ந்த உயர்மலை பகுதி ராணுவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகைச் செடியின் மருத்துவக் குணங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். "உயிர்வேதி ஆயுத யுத்தத்தில் வெளியாகும் காமா கதிர்கள் உடலில் ஊறு ஏற்படுத்தாதவாறு இம்மூலிகையால் தடுக்கமுடியும்" என்கிறார், ராணுவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா.

லே பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினரும் இந்த அதிசய மூலிகை குறித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

"குறைந்த காற்றழுத்தம், ஆக்சிஜன் குறைவு ஆகியவற்றால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவிகரமாக இருக்கும். அத்துடன் இம்மூலிகைக்கு மனஅழுத்தத்தை குணப்படுத்தும், பசியைத் தூண்டும் அம்சமும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார், ஸ்ரீவஸ்தவா.


Next Story