கிழக்கு மலைத்தொடரின் சிறப்புகள்


கிழக்கு மலைத்தொடரின் சிறப்புகள்
x
தினத்தந்தி 6 Jun 2023 4:00 PM GMT (Updated: 6 Jun 2023 4:00 PM GMT)

தீபகற்ப இந்தியாவில், பொதுவாகவே அதிகக் கவனம் பெறாத மலைத்தொடர் என்றால், அது கிழக்கு மலைத்தொடர்தான்.

இமயமலை மற்றும் மேற்கு மலைத்தொடரையும்விட புவியியல் அடிப்படையில் மிகவும் பழமையானது, கிழக்கு மலைத்தொடர் என்பது ஆச்சரியம்தான்.

ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் நடுவே பரவிக் காணப்படும் கிழக்கு மலைத்தொடர் நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கு மலைத்தொடருடன் கிட்டத்தட்ட இணைகிறது. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி போன்ற நதிகள் பாய்வதன் காரணமாக மேற்கு மலைத்தொடரைப் போன்று தொடர்ச்சியாக இல்லாமல், இந்த மலைத்தொடர் அதிக இடைவெளிகளைக் கொண்டுள்ளது. மலைகள், பெருங்குன்றுகள், சிறுகுன்றுகள், குறுங்குன்றுகள், பாறை குவியல்கள் என ஏறத்தாழ 6,500 புவியியல் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இந்த மலைத்தொடரை உருவாக்கியுள்ளன. இந்த மலைத்தொடரில் மொத்தமுள்ள 138 பெரிய மலைகளில் 29 தமிழகத்தில் உள்ளன. கிழக்கு மலைத்தொடரின் மொத்த நீளம் 1,750 கி.மீ.

மொத்தப் பரப்பு 75,000 முதல் 1,00,000 சதுர கி.மீ. ஆகும். இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி ஆந்திரம், தெலுங்கானாவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 25 சதவீதம் தமிழகத்தில் இருக்கிறது. தமிழகத்தில் அதிகம் சிதறிக் காணப்படுவதால் மொத்த நீளத்தைக் கணக்கிடுவதில் சிக்கல்கள் உள்ளன. கிழக்கு மலைத்தொடரின் வடக்கு எல்லை எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதே நேரம் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டது சிமிலிபால் பகுதிதான். இத்தொடரின் தென்மேற்கு எல்லையாகக் கர்நாடகத்தின் சாம்ராஜ் நகருக்கு அருகிலுள்ள பிலிகிரிரங்கன் மலையும், தெற்கு எல்லையாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றங்கரையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளன.


Next Story