குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு போவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. மூளை வளர்ச்சி குன்றி சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போய்விடுகிறது.
'ஏடு தூக்கி பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்க போகிறார்'
என்று கனவு கண்டார் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா. ஆனால் இன்று ஓடி விளையாட வேண்டிய இளமையில் பள்ளிக்கூடம் போக வேண்டிய பருவத்தில் கூலி வேலைக்கு செல்கின்ற சிறுவர்களை கண்டால் நெஞ்சு பொறுப்பதில்லையே. அவர்களது நிலையையும் அதனை போக்கும் வழிகளையும் இக்கட்டுரையில் காண்போம்.
இளமையில் கல் என்பது அவ்வையார் கூறும் அறிவுரை. ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு போவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. மகிழ்ச்சியான நிலை மாறி விடுகிறது. பழக்க வழக்கங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி குன்றி சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போய்விடுகிறது.
சத்துணவு, ஓய்வு, சுகாதார வசதி ஆகிய பற்றாக்குறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலை செய்வதால் ரத்தசோகை, காசநோய் ஆகியவற்றிற்கு ஆளாகின் றனர். நுரையீரல் போன்ற உறுப்புகள் பழுதடைந்து விடுகின்றன. தோல் தொழிற் சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
1986-ம் ஆண்டு அரசு குழந்தை தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டது. அதன் மூலம் கட்டிட வேலை, சாயத் தொழிற்சாலை, நெசவாலை, தீப்பெட்டி செய்தல், சுவரொட்டி ஒட்டுதல், உணவு விடுதிகள் ஆகியவற்றில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வேலைக்கு அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி குழந்தைதொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அன்றைய தினத்தில் அரசு சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து நிறுவனங்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
எல்லா குழந்தைகளும் கட்டாய கல்வி பெறவேண்டும் என்று ஏட்டளவில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தாம் பெற்ற பிள்ளைகளுக்கு உணவும், கல்வியும் அளிப்பது நம் கடமை என்பதை உணரவேண்டும். வறுமை காரணமாக குழந்தைகளை பணிக்கு அனுப்புதல் கூடாது. பிள்ளைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது தொண்டு நிறுவனங்களின் கடமை ஆகும்.
பெற்றோர்கள் எத்தகைய வறுமை வந்தாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் கூடாது. தொழில்நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தி கொள்ளவேண் டும். இருசாராரும் மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் குழந்தை தொழிலாளர் உருவாவதைத் தடுக்க முடியும்.






