சமையல் டிப்ஸ்


சமையல் டிப்ஸ்
x

* பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.

* கூட்டு, பொரியலுக்கு தேங்காய்ப்பூ இல்லையா! புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால் தேங்காய் சேர்ந்த சுவை கிடைக்கும்.

* கத்திரிக்காய் எண்ணெய் கறி சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.

* துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு சமைத்தால் சீக்கிரம் வெந்து விடும். அது வேகும் போது ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்தால் சாம்பார் மணக்கும்.

* சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யப் போகிறீர்களா! கடலை மாவை புளித்த தயிரில் கலந்து கிழங்கு துண்டில் தடவி பொரித்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.

* பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை கலந்தால், பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

* முட்டையை வேக வைக்கும் போது முட்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டு கரு கசியாமலிருக்க நீரில் சில துளி வினிகர் சேர்க்கவும்.

* கண்ணாடி பாட்டிலில் பச்சை மிளகாயுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காற்று புகாமல் மூடி வைத்தால் ஒரு வாரம் கெடாமலிருக்கும்.

* சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

* கிழங்குகளை உப்புப் போட்டு வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது.

* வத்தக்குழம்பு தயார் செய்யும்போது அவரை, கத்திரி, கொத்தவரங்காய் வத்தல்களை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.

* உருளைக்கிழங்கை சீவியதும் சிறிது பயத்தம் மாவைக் தூவி சிப்ஸ் செய்தால் சிப்ஸ் மொறுமொறுப்பாக இருக்கும்.

* வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும் போது சிறிது வெந்தயம் சேர்த்தால் நெய் மணமாக இருக்கும்.

-மல்லிகா அன்பழகன், சென்னை.


Next Story