இரட்டையர்கள் கிராமம்


இரட்டையர்கள் கிராமம்
x

கேரள மாநிலத்தில் கோடின்ஹி கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் தலைமுறை தலைமுறையாக இரட்டையர்கள் இருப்பது அபூர்வம்.

ஒரு கிராமத்தில் இரட்டையர்கள் பிறப்பது சாதாரண விஷயம். ஆனால் அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் தலைமுறை தலைமுறையாக இரட்டையர்கள் இருப்பது அபூர்வம். அப்படிப்பட்ட அதிசய கிராமம் கேரள மாநிலத்தில் இருக்கிறது. அதன் பெயர், கோடின்ஹி. சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் குறைந்தபட்சம் 400 இரட்டை குழந்தைகள் இருப்பதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இரட்டையர்கள் குழந்தைகளாகவோ, அவர்களின் மூதாதையர்களாகவோ இருக்கிறார்கள். இந்த கிராமத்தில் இரட்டையர்கள் பிறப்பது பற்றிய மருத்துவ ரீதியான தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கான சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஆய்வுகளின்படி 2008-ம் ஆண்டில் சுமார் 300 பெண்கள் குழந்தை பெற்றெடுத்தனர். அவற்றில் 15 ஜோடி இரட்டையர்கள் பிறந்தனர். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இரட்டை குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.

கிராமத்தினரிடம் கேட்டால், மூன்று தலைமுறைக்கு முன்பிருந்தே இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். டாக்டர் ஸ்ரீபிஜு என்பவர், "எனக்கு தெரிந்தவரை, இந்த மருத்துவ அதிசயம் 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ தொடங்கியது'' என்கிறார்.

கோடின்ஹி இப்போது இரட்டையர் நகரம் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறது. இரட்டையர்களின் பெயர்களை பதிவு செய்யவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் 'டாகா' என்ற சங்கத்தை நிறுவி உள்ளனர்.


Next Story