நரை முடியை அலங்கரிக்கும் இயற்கை வண்ண சாயங்கள்


நரை முடியை அலங்கரிக்கும் இயற்கை வண்ண சாயங்கள்
x

நரை முடியை அலங்கரிக்கும் இயற்கை வண்ண சாயங்களை பற்றி இங்கு காண்போம்...

மருதாணி:

மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு குளித்துவிடலாம். மருதாணி தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.

காபி:

காபியை நன்றாக காய்ச்சி ஆறவிடவும். அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தலைமுடியை அலசிவிடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.

அவுரி:

அவுரி பவுடரை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவி விடலாம். அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

ரூபார்ப்:

ஒரு வகை கீரையான இதன் தண்டு பகுதியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்துவிடலாம். இது தலைமுடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட்டை வேகவைத்து ஜூஸ் தயாரித்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவவும். பீட்ரூட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஊதா நிறத்தை கொடுக்கும்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றை பிழிந்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். எலுமிச்சை சாறு தலைமுடிக்கு வெளிர் பொன்னிற நிறத்தை அளிக்கும்.

சீமை சாமந்தி:

இந்த சாமந்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற விடவும். பின்பு தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும். தலைமுடி உலர தொடங்கியதும் தண்ணீரில் அலசவும். இது தலைமுடிக்கு வெளிர் பொன்னிறத்தை கொடுக்கும்.

வாதுமை கொட்டை:

கருப்பு வாதுமை கொட்டை ஓடுகளை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். கருப்பு வாதுமை கொட்டை தலைமுடிக்கு அடர் பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

கேரட் சாறு:

கேரட்டை வேகவைத்து, சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும். கேரட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை அளிக்கும்.

இங்கே இடம் பெற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வர, நரை முடி மறைந்து இயற்கை வண்ண சாயத்துடன் கூந்தல் மிளிரும்.

தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கு மரபணு ரீதியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மன அழுத்தம், புகைப்பழக்கம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உணவில் இடம்பெறாதது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு கோளாறுகள் போன்றவைகளும் முடி நரைப்பதற்கு மற்ற காரணங்களாக அமைந்திருக்கின்றன. கூந்தலுக்கு நிறத்தை தரும் மெலனின் என்ற நிறமி குறைவதால் முடி நரைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயதாகும்போது மயிர்க்கால்களில் மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடையலாம் அல்லது இறக்கலாம். அதனால் முடி நரைக்கத் தொடங்கும். ஆனால் முன்கூட்டியே முடி நரைப்பதை சில வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு இயற்கை வண்ண சாயங்கள் தயாரித்து பூசியும் நரை முடியை அலங்கரிக்கலாம்.


Next Story