40 வயதில் சரும அழகை பேணும் வழிமுறைகள்


40 வயதில் சரும அழகை பேணும் வழிமுறைகள்
x

40 வயதை எட்டும்போது சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கும். அந்த சமயத்தில் சரும பராமரிப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சரும அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது பலன் அளிக்காது. உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே சரும அழகை மேம்படுத்த முடியும். பளபளப்பான, ஜொலிப்பான சருமத்தை தக்கவைக்க முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்....

சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு நிறைய தண்ணீர் பருகவும். உடலில் நீர்ச்சத்து சீராக இருந்தால்தான் தோல் நெகிழ்வுத்தன்மை அடையும். இயற்கையான பளபளப்பை தக்கவைக்க உதவும்.

பழங்கள், காய்கறிகள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ளுங்கள். இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூலம்தான் சரும ஆரோக்கியத்தை பேணுவதற்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்க முடியும்.

சருமத்தில் இயற்கையாக படிந்திருக்கும் எண்ணெய் தன்மையை அகற்றாமல் அசுத்தங்களை நீக்குவதற்கு மென்மையான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தவும்.

சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் மற்றும் மேக்கப்பை அகற்ற சல்பேட் இல்லாத கிளென்சரை பயன்படுத்தலாம். சருமத்தை அளவுக்கு அதிகமாக சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்வது சரும வறட்சியை ஏற்படுத்தும். சரும எரிச்சலுக்கும் வழிவகுக்கும்.

சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றுவதற்கு பொருத்தமான 'எக்ஸ்போலியேட்டர்'களை பயன்படுத்துவது நல்லது. சருமத்தில் இருந்து அதிக அளவில் இறந்த செல்கள் உதிர்வதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சருமத்தில் எரிச்சல் உணர்வு எட்டிப்பார்க்கும்.

ஆன்டி ஆக்ஸிடென்டுகள், ரெட்டினாய்டுகள் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தலாம். அவை சரும சுருக்கங்களை குறைக்க உதவும்.

மேகமூட்டம் சூழ்ந்திருக்கும் நாட்களில் கூட சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது அவசியமானது. அது சருமம் சேதம் அடைவதை தடுக்க உதவும். குறிப்பாக சருமத்தில் கோடுகள், புள்ளிகள் படருவதை தடுக்கக்கூடியது.

சரும செல்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், புத்துணர்ச்சி ஊட்டவும் தூக்கமும் அவசியமானது. தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்குவது அவசியமானது. கண்களில் சோர்வு, கருவளையம் ஏற்படுவதை தடுப்பதற்கும் தூக்கம் உதவும்.

தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது மன அழுத்தத்தை தவிர்க்க உதவும். மன அழுத்தம் நீடித்தால் அது சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

மீன்கள், ஆளிவிதைகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள வால்நட்ஸ் போன்ற உணவுப்பொருட்கள் சருமத்தை நெகிழ்வடைய செய்யும். அதன் நீர்ச்சத்தை பராமரிக்கவும் உதவும்.

உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். சரும செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். வியர்வையை அகற்றுவதற்கும், சரும துளைகள் அடைபடுவதை தடுப்பதற்கும் உடற்பயிற்சி உதவும். உடற்பயிற்சி செய்த பிறகு குளிப்பதற்கு மறக்காதீர்கள்.


Next Story