செல்பி எடுக்க அழைத்து கார்த்தியை கோபப்படுத்திய கஸ்தூரி


செல்பி எடுக்க அழைத்து கார்த்தியை கோபப்படுத்திய கஸ்தூரி
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 5 March 2019 10:46 PM GMT)

செல்பி எடுக்க அழைத்து கார்த்தியை நடிகை கஸ்தூரி கோபமடையச் செய்தார்.


ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜூலை காற்றில்’. கே.சி.சுந்தரம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார்.

கார்த்தியை கஸ்தூரி பேச அழைக்கும்போது கையில் செல்போனை வைத்துக்கொண்டு ‘இங்கு வாங்களேன் நாம் ஒரு செல்பி எடுத்துக்கொள்ளலாம்’ என்றார். மைக் முன்னால் வந்த கார்த்தியிடம், ‘உங்க அப்பா இல்லை. அதனால் அவசரமாக ஒரு செல்பி எடுத்துக்கொள்வோம்’ என்றார். நடிகர் சிவகுமாரின் செல்பி சர்ச்சையை குறிப்பிட்டு கஸ்தூரி பேசியது கார்த்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் செல்பிக்கு முகத்தை காட்டாமல் திருப்பிக்கொண்டு மைக்கில் அவர் பேசியதாவது:-

“செல்பி என்ற ஒரு விஷயத்துக்கு மரியாதை இல்லாமல் செய்துவிட்டார்கள். பிரபலங்களிடம் செல்பி எடுக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்தை நாம் மறந்து போய்விட்டோம். ஒவ்வொரு செல்போனிலும் தற்போது முன்பக்கமும் பின்பக்கமும் ‘பிளாஷ்’ இருக்கிறது.

அவ்வளவு லைட்ஸ் கண்களில் பட்டால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாதா? தலைவலி இருப்பவர் நிலைமை என்ன ஆகும்? இதுகுறித்து யாரும் சிந்திப்பது இல்லை. ‘ஜூலை காற்றில்’ படத்தில் புதிய விஷயங்கள் உள்ளன. இதற்காகவே படம் வெற்றி பெறும்.” இவ்வாறு அவர் பேசினார். கஸ்தூரியின் செல்பி விவகாரம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story