450 படங்களில், கவுண்டமணி


450 படங்களில், கவுண்டமணி
x
தினத்தந்தி 4 Jun 2021 3:19 PM GMT (Updated: 4 Jun 2021 3:19 PM GMT)

வழக்கம்போல் தனது பிறந்தநாளை அவர் எளிமையாக கூட கொண்டாடவில்லை. ஆனால் அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு கடந்த மாதம் 25-ந் தேதி பிறந்தநாள். வழக்கம்போல் தனது பிறந்தநாளை அவர் எளிமையாக கூட கொண்டாடவில்லை. ஆனால் அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள். அவரைப் பற்றிய விசேஷ பதிவுகளை வெளியிட்டார்கள். அதில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு:

‘‘கவுண்டமணியின் சொந்த ஊர், பொள்ளாச்சியில் இருந்து திருமூர்த்திமலைக்கு செல்லும் வழியில் உள்ள வல்லகுண்டாபுரம் கிராமம். ஆரம்ப காலத்தில் அவர் நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு நாடகத்தில் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், ‘கவுண்டமணி’ என்று அழைக்கப்பட்டார்.

நாகேஷ் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தில் அவருக்கு வசனம் கிடையாது. கூட்டத்தில் ஒருவராக வந்து போனார். அப்போது அவருக்கு 26 வயது. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தில்தான் முதன்முதலாக வசனம் பேசி நடித்தார்.

இவரும், செந்திலும் இணைந்து நடித்த படங்கள் அமோக வெற்றியை பெற்றன. குறிப்பாக, ‘கரகாட்டக்காரன்’ படம் வெற்றியின் உச்சத்தை தொட்டது. அவர் இதுவரை 450 படங்களில் நடித்து இருக்கிறார்.

கவுண்டமணி பேசிய வசனங்களில், ‘‘இந்த காரை வச்சிருந்த சொப்ன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்காங்க, ’’ ‘‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, ’’ ‘‘நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா,’’ ‘‘டேய் இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே’’ ஆகிய வசனங்கள் தலைமுறைகளை தாண்டி, கவுண்டமணியின் பெயர் சொல்லும்.

Next Story