மோசடி நபருடன் நெருக்கம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜாக்குலின்


மோசடி நபருடன் நெருக்கம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஜாக்குலின்
x
தினத்தந்தி 10 Jan 2022 9:39 AM GMT (Updated: 10 Jan 2022 9:39 AM GMT)

சுகேஷ் சந்திரசேகருடன் ஜாக்குலின் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஜாக்குலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழில் அதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடி பணம் பறித்த புகாரில் கைதாகி ஜெயிலில் அடைப்பட்டு உள்ள சுகேஷ் சந்திரசேகருடன் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியானது. ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் வழங்கி இருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து ஜாக்குலினுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி விசாரித்தனர். 

ஜாக்குலினும் சுகேசும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதனை ஜாக்குலின் மறுத்தார். இந்த நிலையில் தற்போது சுகேசுடன் ஜாக்குலின் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு ஜாக்குலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்த நாட்டு மக்கள் எனக்கு மரியாதையையும் அன்பையும் தந்துள்ளனர். இதில் ஊடகமும் அடங்கும். அவர்களிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். இப்போது நான் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன். எனவே எனது தனிப்பட்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீதி வெல்லும்‘‘ என்று கூறியுள்ளார்.


Next Story