பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுகோயா காலமானார்
மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோழிக்கோடு:
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுகோயா காலமானார். அவருக்கு வயது 76. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவர் இன்று மதியம் 1.05 மணியளவில் அவர் காலமானார். வண்டூரில் நடந்த கால்பந்து போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 3 மணி முதல் கோழிக்கோடு டவுன் ஹாலில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை கண்ணாம்பரம் காபர்ஸ்தானில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
கோழிக்கோடு கடற்கரை கிராமமான பள்ளிகண்டியில் மம்மது மற்றும் இம்பிச்சி ஆயிஷா தம்பதியருக்கு மாமுகோயா மகனாக ஜூலை 5, 1946 இல் பிறந்தார். 1979 இல், மாமுகோயா நிலாம்பூர் பாலன் இயக்கத்தில் அன்யார் பூமி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
தமிழ் , பிரஞ்ச் சினிமா உள்பட 450 படங்களில் நடித்து உள்ளார்.தமிழில் அரங்கேற்ற வேளை, கோப்ரா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
ராமோஜி ராவ் ஸ்பிகீங், வடக்கு நோக்கி எந்திரம்,saaகோரம், காந்திநகர் 2வது தெரு, சந்தேஷம், ராஜதந்திரம், உள்பட பல படங்களில் நடித்து உள்ளார்.
இன்னத்தே சிந்த விஷயம் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது பெற்றுள்ளார்.
மாமுகோயாவிற்கு மனைவி சுகாரா மற்றும் குழந்தைகள் முஹம்மது நிசார், ஷாஹிதா, நதியா மற்றும் அப்துல் ரஷீத் என 4 பிள்ளைகள் உள்ளனர்.