நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு


நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு
x

நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.



புனே,



நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மராட்டியத்தின் மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனால், கரும்புகை வான்வரை பரவியது. காற்றில் பரவிய புகையால் அந்த பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தன. இதில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இதுபற்றி கூப்பர் மருத்துவமனையின் மருத்துவர் சதாபுலே கூறும்போது, மும்பை அந்தேரியின் மேற்கு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே 32 வயது ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பினர். அவர்கள் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

வருகிற 2023ம் ஆண்டு மார்ச் 8ந்தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. காமெடி மற்றும் காதல் கலந்த இந்த படத்தில் போனி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் நேற்றிரவு 10.35 மணியளவில் மும்பை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


Next Story