'வருத்தம் தெரிவிக்கும் சீன் எல்லாம் செல்லாது' - ஞானவேல்ராஜாவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதிலடி


வருத்தம் தெரிவிக்கும் சீன் எல்லாம் செல்லாது - ஞானவேல்ராஜாவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதிலடி
x

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அறிக்கையை விமர்சித்து, நடிகர் சமுத்திரக்கனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், 'பருத்தி வீரன் பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் நான்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த அறிக்கையை விமர்சித்து நடிகர் சமுத்திரக்கனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அதில் தெரிவித்திருப்பதாவது:-

"பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கும் சீன் எல்லாம் இங்கு செல்லாது... நீங்கள் செய்ய வேண்டியது, எந்த பொதுவெளியில் அமர்ந்து அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ.. அதே பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்..!

நீங்கள் கொடுத்த அந்த கேவலமான, தரம் கெட்ட பேட்டியை சமூக வலைதளங்களில் இருந்து துடைத்து தூர ஏறிய வேண்டும். அன்று கொடுக்காமல் ஏமாற்றி விட்டு சென்ற பணத்தை பாக்கி இல்லாமல் திருப்பி கொடுக்க வேண்டும். ஏனென்றால்.. கடன் வாங்கிய நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டி உள்ளது.

பின்னர் 'பருத்திவீரன்' திரைப்படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது. பாவம்.... அவர்கள் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவர்கள். காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி" என்று தெரிவித்துள்ளார்.


Next Story