ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு


ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு
x

சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். சென்னை போரூரில் ஒரு மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழ்நாடு அளவில் இருக்கும் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பு தற்போது பேசுபொருளாகி உள்ளது. விஜய்யும் அரசியல் கட்சித் தொடங்கும் முன்பு இப்படி தொடர்ச்சியாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பது போன்று பல விஷயங்களை செய்து வந்தார்.

இதனை தற்போது சிவகார்த்திகேயனும் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது படத்தின் வெற்றியை பாக்ஸ் ஆபிஸ் வசூல்தான் தீர்மானிக்கும் சூழல் இருப்பதால் இதனைக் கருத்தில் கொண்டு ரசிகர்களுடன் பிணைப்பில் இருக்க சிவகார்த்திகேயன் இப்படி கூட்டத்தை கூட்டுவதாக கூறப்படுகிறது. இவரது 'அமரன்' படம் ரூ. 100 கோடியை கடந்தால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் நிச்சயம் வலுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story