பேரனின் புகைப்படங்களை பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கமல்ஹாசன் பட நடிகை


பேரனின் புகைப்படங்களை பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கமல்ஹாசன் பட நடிகை
x
தினத்தந்தி 13 Sep 2023 2:07 PM GMT (Updated: 13 Sep 2023 2:37 PM GMT)

நடிகை ரவீணா டாண்டன் தன்னுடைய பேரனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

புனே,

இந்தியில் பிரபல நடிகையான ரவீணா டாண்டன், தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்றார். சாது என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

இவர், 1995-ம் ஆண்டில் பூஜா மற்றும் சாயா ஆகியோரை அவர்களின் 11 மற்றும் 8 வயதில் தத்தெடுத்து கொண்டார். எனினும், 2003-ம் ஆண்டு ரவீணாவின் ஸ்டம்புடு பட தயாரிப்பின்போது, பட விநியோகஸ்தரான அனில் தடானி என்பவரை சந்தித்து உள்ளார். இவர்களின் சந்திப்பு, டேட்டிங்கில் தொடங்கி 2004-ம் ஆண்டு பிப்ரவரியில் திருமணத்தில் முடிந்தது.

இந்த தம்பதிக்கு 2005-ம் ஆண்டு மார்ச்சில் பெண் குழந்தை (ராஷா) பிறந்தது. 2008-ம் ஆண்டு ஜூலையில் 2-வது குழந்தை (ரன்பீர்வர்தன்) பிறந்தது.

இவர்களில் தூரத்து உறவினரின் மகளான சாயாவுக்கு திருமணம் முடிந்து 4 வயதில் மகன் உள்ளார். தனது பேரனின் பிறந்த நாளை (செப்டம்பர் 12) முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அதில், என்னுடைய குழந்தையின் குழந்தைக்கு பிறந்த நாள்... ருத்ராமெண்டிஸ். எனதருமை ருத்ரா, உனக்கு மகிழ்ச்சி பெருகட்டும். உன்னுடைய வழியை அன்பு, மகிழ்ச்சி, புகழ் மற்றும் வெற்றி ஆகியவற்றால் இறைவன் எப்போதும் ஒளி பாய்ச்சட்டும் என தெரிவித்து உள்ளார்.

பேரன் மற்றும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை அவர் பகிர்ந்ததும், ரசிகர்கள் விமர்சன பகுதியில் பிறந்த நாள் வாழ்த்துகளை அள்ளி தெளித்து வருகின்றனர். 2.35 லட்சம் பேர் லைக்குகளையும் அளித்துள்ளனர்.

சமீபத்தில் கே.ஜி.எப்.-2 படத்தில் ரவீணா நடித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து நடிகர் சஞ்சய் தத்துடன் குட்சாதி என்ற காதல் கலந்த காமெடி படத்தில் நடித்து வருகிறார். பாட்னா சுக்லா என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.


Next Story