ஜெய் ஸ்ரீ ராம்... அன்னபூரணி பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா


ஜெய் ஸ்ரீ ராம்... அன்னபூரணி பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா
x
தினத்தந்தி 18 Jan 2024 7:22 PM GMT (Updated: 18 Jan 2024 7:37 PM GMT)

அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அன்னபூரணி'. நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இப்படம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. ஓ.டி.டி வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜெய் ஸ்ரீ ராம்... இந்த குறிப்பை கனத்த இதயத்துடனும், 'அன்னபூர்ணி' திரைப்படம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடனும் எழுதுகிறேன். 'அன்னபூரணி'யை உருவாக்குவது ஒரு சினிமா முயற்சி மட்டுமல்ல, நெகிழ்ச்சியைத் தூண்டும் மற்றும் ஒருபோதும் கைவிடாத உணர்வைத் தூண்டுவதற்கான இதயப்பூர்வமான முயற்சியாகும்.

இது வாழ்க்கையின் பயணத்தை பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்டது, அங்கு தடைகளை சுத்த மன உறுதியுடன் கடக்க முடியும் என்பதை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். ஒரு நேர்மறையான செய்தியைப் பகிர்வதற்கான எங்கள் நேர்மையான முயற்சியில், நாம் கவனக்குறைவாக காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

முன்பு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் இருந்து அகற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நானும் எனது குழுவும் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் எனது உண்மையான மற்றும் இதயப்பூர்வமான மன்னிப்பைக் கோருகிறேன்.

'அன்னபூரணியின் பின்னால் உள்ள நோக்கம் உயர்த்துவதும் ஊக்கமளிப்பதும் ஆகும், துன்பத்தை ஏற்படுத்துவது அல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக, திரைப்படத் துறையில் எனது பயணம் நேர்மறையைப் பரப்புவதற்கும், ஒருவருக்கொருவர் கற்றலை வளர்ப்பதற்கும் ஒரு ஒற்றை நோக்கத்துடன் வழிநடத்தப்படுகிறது.

மனமார்ந்த வணக்கங்களுடன்... நயன்தாரா" என்று அதில் பதிவிட்டுள்ளார்.




Next Story