விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்


விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 27 March 2023 9:37 AM GMT (Updated: 27 March 2023 9:40 AM GMT)

விபத்து வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராகியுள்ளார்.

செங்கல்பட்டு,

'இருட்டு அறையில் முரட்டுக்குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவரது தோழி வள்ளிசெட்டி பவானி (வயது 28). அமெரிக்காவில் தங்கி இருந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை வந்திருந்தார்.

பின்னர் யாஷிகா ஆனந்த், வள்ளிசெட்டி பவானி மற்றும் நண்பர்கள் காரில் வெளியே சென்று விட்டு மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் வரும்போது கார் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவானி உயிரிழந்தார். இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் மீதான விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்த 21-ந்தேதி யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து கடந்த 23-ந்தேதி நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். சனிக்கிழமைக்குள் (25-ந்தேதி) அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றால் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், யாஷிகா ஆனந்த் தற்போது செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராகியுள்ளார்.


Next Story