பட சூட்டிங்கில் காயம், ஓய்வுக்கு பின் மீண்டும்... புகைப்படங்களை பகிர்ந்த அமிதாப் பச்சன்


பட சூட்டிங்கில் காயம், ஓய்வுக்கு பின் மீண்டும்... புகைப்படங்களை பகிர்ந்த அமிதாப் பச்சன்
x

நடிகர் அமிதாப் பச்சன் சண்டை காட்சியில் காயம் ஏற்பட்டு, ஓய்வுக்கு பின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

ஐதராபாத்,

இந்தி திரையுலகில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, நடிகர் அமிதாப்புக்கு வலது விலா பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.

இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார். அவருக்கு டாக்டர்கள் சி.டி. ஸ்கேன் செய்து உள்ளனர். இதன்பின்பு, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.

வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுத்து வந்து உள்ளார். இந்த விவரங்களை அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன் என்றும் தெரிவித்த அவர், ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.

இந்த நிலையில், சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பின் அமிதாப் பச்சன் மீண்டும் படப்பிடிப்பில் உற்சாகமுடன் கலந்து கொண்டார். இதுபற்றி அவர் தனது பிளாக்கில் பல புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக நேற்றிரவு பகிர்ந்து கொண்டார்.

அந்த புகைப்படங்களில் அவரது ஆர்வம் மற்றும் பரவசம் ஆகியவற்றை பார்க்க முடிந்தது. அதில், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைவது போன்ற புகைப்படம் முதலில் காட்சி அளிக்கிறது. வேலையில் ஓய்வு எடுத்து... ஒரு சில சங்கடங்களை தவிர... தொடர்ந்து முன்னேறி கொண்டிருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

அதன்பின்னர், படப்பிடிப்பு தளத்தில் இருந்த இரு புகைப்படங்களை வெளியிட்ட பின், தொடர்ந்து, ஒப்பனை செய்து கொள்ளும் புகைப்படம் ஒன்றையும் ரசிகர்களுக்காக பகிர்ந்து உள்ளார். இதனால், அவர் படப்பிடிப்புக்கு தயாரானது உறுதியானது.

அதனை அடுத்து, இயக்குனருடன் உரையாடும் படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். வசனங்களில் திருத்தங்கள் மற்றும் விவாதங்கள்... நட்பு ரீதியில் தொடர்ந்தது... என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த படம் இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அடுத்தடுத்து படப்பதிவு செய்யப்படுகிறது. படத்தில் தீபிகா படுகோனே மற்றும் பிரபாஸ் இருவரும் முக்கிய வேடமேற்று நடித்து வருகின்றனர். இதன்பின்னர், செக்சன் 84 என்ற படத்திலும் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார்.


Next Story