ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் பூர்ணிமா... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'செவப்பி' திரைப்படம்...!


ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் பூர்ணிமா... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் செவப்பி திரைப்படம்...!
x
தினத்தந்தி 11 Jan 2024 10:40 AM GMT (Updated: 11 Jan 2024 10:52 AM GMT)

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

சென்னை,

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 7வது சீசன் வரும் ஞாயிறு அன்று முடிவடைய உள்ளது. இதில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா கோப்பையை வெல்வார் என எதிப்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் பங்கேற்ற யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி கடந்த வாரம் ரூ.16 லட்ச பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இவர் ஹிரோயினாக அறிமுகமாகி உள்ள 'செவப்பி' திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

கிராமத்தில் வசிக்கும் ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வைத்து உருவாகி இருக்கும் படம், 'செவப்பி'. இதை ராஜேஷ்வர் காளிசாமி, பிரசன்னா பாலச்சந்திரன் தயாரித்துள்ளனர். எம்.எஸ்.ராஜா எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது

பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி பாட்டி, ஷ்ரவன் அத்வேதன், டில்லி, செபாஸ்டியன் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். மனோகரன் எம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.பிரவீன் குமார் இசையமைத்துள்ளார்.

ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான் சிறுவன். ஒரு கட்டத்தில் அதைப் பிரிய நேரிடுகிறது. இதனால் ஒன்றாக வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் கதை. இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

இந்த படம் பொங்கலை முன்னிட்டு நாளை 'ஆஹா தமிழ்' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான 'அன்னப்பூரணி' படத்தில் பூர்ணிமா ரவி சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story