தாய்லாந்தில் மிகப்பெரிய சண்டைக்காட்சி... தளபதி 68 பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்...!


தாய்லாந்தில் மிகப்பெரிய சண்டைக்காட்சி... தளபதி 68 பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்...!
x

நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

'லியோ' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார். இந்நிலையில் விஜயதசமி அன்று படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தாய்லாந்தில் நேற்று இரவு மிகப்பெரிய சண்டைக்காட்சியின் ஷூட்டிங் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பதிவில், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் பிரபு. இந்த வருடம் உங்களுக்கு எல்லாவற்றிலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். 'தளபதி 68' படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைய நாட்கள் நடைபெறும். நேற்று இரவு தாய்லாந்தில் மிகப்பெரிய சண்டைக்காட்சியின் ஷூட்டிங் நடைபெற்றது. அதனால் உங்கள் பிறந்தநாளான இன்று லீவ் கிடைத்துள்ளது' என பதிவிட்டுள்ளார்.


Next Story