மிக்ஜம் புயல் பாதிப்பு - ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்


மிக்ஜம் புயல் பாதிப்பு - ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 10 Dec 2023 6:10 PM GMT (Updated: 10 Dec 2023 6:19 PM GMT)

தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

சென்னை,

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார். அதன்படி, அனைத்து திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

மேலும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிட வங்கி விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் "மிக்ஜம் புயல்" பாதிப்பின் நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "மிக்ஜம் புயல் - கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் - இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் - சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!" என்று அதில் பதிவிட்டுள்ளார்.



Next Story